ஜெ. வழக்கில் வாதாட அனுமதி கேட்ட சு.சுவாமி, எதிர்ப்பு தெரிவித்த ஜெ. தரப்பு! ஹைகோர்ட் நாளை முடிவு
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணையில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி வாதிட்டார். இதற்கு ஜெயலலிதா தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முடிவை நாளை அறிவிப்பதாக கூறினார் நீதிபதி குமாரசாமி.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருட சிறையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நிலையில், வழக்கின் மேல் முறையீடு தற்போது ஹைகோர்ட் சிறப்பு பெஞ்ச் நீதிபதி குமாரசாமி முன்னிலையில், நடந்து வருகிறது.

இதனிடையே, வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டு வாதிட அனுமதிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி ஒரு மனு தாக்கல் செய்தார். இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, "நான்தான் இந்த வழக்கின் முதல் புகார்தாரர். எனவே எனக்கு வாதிட அனுமதி தர வேண்டும். உச்ச நீதிமன்றமும், என்னை வாதிட அனுமதித்துள்ளது" என்றார்.
ஆனால், இதற்கு ஜெயலலிதா தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் அப்படியெல்லாம் உத்தரவிடவில்லை என்றும், ஏற்கனவே சென்னை நீதிமன்றம், இவருக்கு வாய்ப்பு மறுத்துள்ளது என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமாரசாமி, சுப்பிரமணியன் சுவாமியை பார்த்து, 'உங்களை வாதிட அனுமதித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை காண்பியுங்கள்' என்று கேட்டார். ஆனால், சு.சுவாமியோ, உத்தரவு எழுத்துப்பூர்வமாக தரப்படவில்லை. வாய்மொழியாக கூறப்பட்டதுதான் என்றார்.
வாய்மொழியாக கூறுவது எப்படி வழக்கிற்கு பொருந்தும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி குமாரசாமி, இதுதொடர்பாக நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications