ஜெ. வழக்கில் ஆச்சார்யா நியமனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மதுரை வக்கீல் திடீர் மனு
டெல்லி: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பி.வி. ஆச்சார்யா நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை 2 வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகால சிறை தண்டனை விதித்தார் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா. இந்த விசாரணையில் கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகியிருந்தார் பிவி ஆச்சார்யா.

பின்னர் தங்களுக்கான தண்டனையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு மேல்முறையீடு செய்தது. அதன் மீதான விசாரணையின் போதும் கர்நாடகா உயர்நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக பிவி ஆச்சார்யா ஆஜரானார். ஜெயலலிதா உள்ளிட்டோரை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார்.
இந்த விடுதலைக்கு எதிராக கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனுக்கள் மீது நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வாராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது. கர்நாடகா அரசு தரப்பு, ஜெயலலிதா தரப்பு இறுதி வாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் ஆஜராகி தமது வாதங்களை முன்வைத்தனர்.
மேலும் கர்நாடகா அரசுக்கு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய உரிமை இல்லை எனக் கூறி ஜெயலலிதா தரப்பு ஒருமனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதிலளித்திருந்த பிவி ஆச்சார்யா, பெங்களூருவுக்கு இவ்வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம்தான் மாற்றியது; உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன்தான் கர்நாடகா அரசு தரப்பு தம்மை இவ்வழக்கில் அரசுதரப்பாக இணைத்துக் கொண்டது; இந்த விவகாரம் பல முறை விவாதிக்கப்பட்டு கர்நாடகா அரசு தரப்பு ஆஜராகலாம் என முடிவு காணப்பட்டுவிட்ட விஷயம். இதை மீண்டும் மீண்டும் எழுப்புவது வழக்கை இழுத்தடிக்கும் செயல் எனவும் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர் ரத்னம் என்பவர், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசை அரசு தரப்பாக ஏற்கக் கூடாது; ஆகையால் கர்நாடகா அரசு வழக்கறிஞராக பிவி ஆச்சார்யா நியமித்தது செல்லாது எனக் கூறி மனு ஒன்றை திடீரென தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று 2 வார காலத்துக்கு ஒத்திவைத்துள்ளது. சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படும் நாளில் இம்மனு மீதான விசாரணை நடைபெறக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications