ஜெயலலிதா மறைவு.. மரியாதை செலுத்தி ஒத்தி வைக்கப்பட்டது நாடாளுமன்றம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
டெல்லி: தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா காலமானதையடுத்து, அவருக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டன.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர், அவர் நேற்று இரவு 11.30 மணிக்கு மரணம் அடைந்தார் என்ற செய்தியை அப்போலோ மருத்துவமனை அறிவித்தது.

இதனையடுத்து, தமிழகத்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இன்று ஒரு நாள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிக் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. இன்று மாலை அவரது உடல் எம்.ஜி.ஆர். சமாதி அருகில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. அப்போது, மறைந்த ஜெயலலிதாவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications