சொந்தம் இல்லா விட்டாலும் சொத்து சேர்க்கவே ஜெ.,உடன் சசிகலா தங்கினார் - சுப்ரீம் கோர்ட்
சொந்தங்களாக இல்லாவிட்டாலும் போயஸ் தோட்டத்தில் தங்கி ஜெயலலிதா உடன் சசிகலா, இளவரசி , சுதாகரன் கூட்டுச்சதி செய்து சொத்து சேர்த்தது உறுதியாகியுள்ளதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
டெல்லி: வருவாய்க்கு மீறி 211 சதவிகிதம் சொத்து குவிக்கப்பட்டு இருப்பது ஒன்றே, சசிகலா உள்ளிட்ட 3 பேரின் தண்டனையை உறுதி செய்ய போதுமானது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். மூவருக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையில் எந்த வகையிலும் ரத்த சொந்தம் இல்லையென்றாலும் இவர்கள் மூவரும் அவருடன் சேர்ந்து வசித்துள்ளனர் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் தன்னுடைய தீர்ப்பில், இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் பதில் மனுதாரர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால் சட்டப்படி அவர் இந்த வழக்கில் இருந்து விலக்கப்படுகிறார். இந்த வழக்கில் ரூ.66 கோடிக்கு வருவாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக சிறப்பு நீதிமன்றம் கணக்கிட்டுள்ளது.
211 சதவிகிதம் சொத்துக்கள் குவிப்பு
கர்நாடகா உயர்நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் ரூ.2 கோடியே 82 லட்சத்து 36 ஆயிரத்து 812 என்று கணக்கிட்டுள்ளது. இதன் அடிப்படையில் அளவுக்கு மீறிய சொத்து 8.12 சதவிகிதம் என்று வருகிறது. இந்த கணக்கு தவறானதாகும். இந்த தவறை சரி செய்தாலே வருவாய்க்கு மீறிய சொத்து கணக்கு ரூ.16 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 812 என்று வருகிறது. இது 76.7 சதவிகிதமாகும். உச்சநீதிமன்றம் ஆராய்ந்து பார்த்த சொத்து, வருவாய், செலவு கணக்கின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருவாய்க்கு மீறிய சொத்து 35 கோடியே 73 லட்சத்து 4 ஆயிரத்து 6 ரூபாய் வருகிறது. இது 211.09 சதவிகிதம் ஆகும்.
ஜெயலலிதா விடுவிப்பு
இந்த கணக்கீடு மட்டுமே இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்ய போதுமானது. இதனடிப்படையில் தனிக்கோர்ட்டு மிக சரியாக கணக்கீடு செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது என்று தெரிய வருகிறது. ஆகவே தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அவர் விலக்கப்பட்டாலும், மற்ற குற்றவாளிகளான சசிகலா, சுதாகரன், இளவரசி தனிக்கோர்ட்டு விதித்த தண்டனைக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.
கூட்டுச்சதி
மற்ற குற்றவாளிகள் மூவரும் முதல் குற்றவாளியுடன் கூட்டு சதியில் ஈடுபட்டவர்கள் என்று தெரிய வருகிறது, தனி நீதிமன்ற தீர்ப்பில், ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் பொது ஊழியர்கள் மட்டுமின்றி தனி நபர்களும் தண்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது மிகவும் சரியானதுதான். இந்த வழக்கில் அளிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இவர்கள் மூவரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளது, தனிக்கோர்ட்டின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள காரணங்களால் நிரூபணம் ஆகிறது.
கூட்டுச்சதிக்கு ஆதாரம்
ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் தொடர்பாக சசிகலாவின் பெயரில் மறைந்த ஜெயலலிதா பவர் ஆப் அட்டார்னி ஒன்றை அளித்து இருக்கிறார். இந்த நிறுவனம் தொடர்பான சட்டரீதியான சிக்கல்களில் இருந்து தன்னை முற்றிலும் விலக்கி வைத்துக்கொள்ளவே ஜெயலலிதா இப்படி செய்திருக்கிறார் என்று தெரிகிறது. ஒரே நாளில் 10 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்பது சாட்சியங்கள் மூலம் தெரிய வருகிறது. இதுதவிர சசிகலா, சுதாகரன் ஆகியோர் தனியாகவும்நிறுவனங்களை தொடங்கி இருக்கின்றனர்.
சொத்துக்காக தங்கினர்
இந்த நிறுவனங்கள் அனைத்துமே நமது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனங்கள் தொடர்பான கிளை நிறுவனங்களாகவே இருப்பதாக சாட்சியங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்துமே மறைந்த ஜெயலலிதாவின் வீட்டு முகவரியில் தான் இயங்கியிருக்கிறது. எனவே இவை குறித்து அவருக்கு எதுவும் தெரியாது என்று கூறமுடியாது. இவர்கள் மூவருக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையில் எந்த வகையிலும் ரத்த சொந்தம் இல்லையென்றாலும் இவர்கள் மூவரும் அவருடன் சேர்ந்து வசித்துள்ளனர்.
ஆதாரங்கள் உள்ளன
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் வருமானம் உள்ளது என்று கூறியிருந்தாலும், ஜெயலலிதாவின் பணத்தில் இருந்து பல்வேறு நிறுவனங்களை தொடங்கியது, பெருமளவிலான நிலங்களை விலைக்கு வாங்கியது ஆகியவை இந்த மூவரும் அவருடைய வீட்டிலேயே அவருடன் தங்கியிருந்து ஜெயலலிதாவின் சொத்துகளை பராமரித்ததற்கும், கூட்டுச்சதியில் ஈடுபட்டதற்கும் தேவையான ஆதாரமாக இருந்திருக்கிறது.
ரூ.1 கோடி பங்கு மூலதனம்
மறைந்த ஜெயலலிதாவின் சார்பாக வருமான வரித்துறைக்கு அளித்த வாக்குமூலம் ஒன்றில் மறைந்த ஜெயலலிதா, சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு ரூ.1 கோடியை பங்கு மூலதனமாக அளித்து உள்ளார். அந்த ஒரு கோடியை பிணையாக வைத்து அந்த நிறுவனத்துக்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நிறுவனத்துடன் மறைந்த ஜெயலலிதாவுக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறமுடியாது.
சரியான கணக்கு
ஒரு வங்கி கணக்கில் இருந்து இன்னொரு வங்கி கணக்குக்கு பணம் மாறி இருப்பது இவர்களுக்கு இடையே தவறாக பெறப்பட்ட பணத்தை பரிவர்த்தனை செய்து கொள்ளும் வகையில் கூட்டுச்சதி இருப்பதை நிரூபிக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு இடையிலான கூட்டுச்சதியானது தேவையான சாட்சியங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் சரியான காரணங்களின் அடிப்படையில் சரியான முடிவை எடுத்துள்ளது. இந்த காரணங்களால் சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து கர்நாடகா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யப்படுகிறது.
தண்டனை உறுதி
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நிலையில், இவர்களுக்கு எதிராக தனிக்கோர்ட்டு இவர்களுக்கு வழங்கிய சிறைதண்டனை மற்றும் இதர அபராதங்கள் அனைத்தும் உறுதி செய்யப்படுகின்றன. இவர்கள் மூவரும் விசாரணை நீதிமன்றம் முன்னிலையில் உடனடியாக சரணடைய வேண்டும். இவர்கள் மூவருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றும் வகையில் விசாரணை கோர்ட்டு சட்டத்தின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல் நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் தன்னுடைய தீர்ப்பில் கூறினார்.