வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல.. சுப்ரீம் கோர்ட் பரபரப்புக் கருத்து
டெல்லி: முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி. சுதாகரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு வழக்கில் இன்று கர்நாடக சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல என்று பரபரப்புக் கருத்தைத் தெரிவித்தது.
மேலும் பணம் வரும் வழி தவறாக இருந்தால் மட்டுமே அது குற்றம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி வாதம் தொடங்கியதும், முதலில் கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தனது வாதத்தை முன்வைத்தார்.
விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும். அதுதான் எனது கடைசி கோரிக்கை என்று கூறி அவர் தனது வாதத்தை முடிவு செய்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி. சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுக்களை நீதிபதிகள் பினாகி கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இதில் கடைசியாக மே 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை கர்நாடக அரசுத் தரப்பில் பி.வி.ஆச்சார்யா வாதத்தை முன் வைத்தார். அப்போது சசிகலாவை அதிமுகவினர் சின்னம்மா என்று அழைக்கப்படுபவர் என்றும், அவர் தொடங்கிய போலி நிறுவனங்கள் மூலமாக ஜெயலலிதாவுக்கு வருவாய் கிடைத்ததாகவும் ஆச்சாரியா வாதம் செய்தார்.
இதையடுத்து மே 12ம் தேதி நடந்த விசாரணைக்குப் பின்னர் ஜூன் 1ம் தேதிக்கு (இன்று) விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இன்றை அனைத்துத் தரப்பும் தங்களது இறுதி வாதங்களையும் முடித்துக் கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி இன்று மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தான் வாதாட 2 மணி நேர அவகாசம் கேட்டார். பின்னர் தனது வாதத்தை அவர் தொடங்கினார்.
வழக்கின் முக்கிய அம்சங்களை சுருக்கமாக விவரித்துப் பேசிய அவர் கடைசியாக இது எனது வக்கீல் தொழிலில் மறக்க முடியாத தருணம். நான் இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் விளக்கிக் கூறி விட்டேன். இந்த வழக்கைப் பொறுத்தவரை விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு (ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தலா 4 ஆண்டு சிறை, ரூ.100 கோடி அபராதம்) செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்பதே எனது கடைசி கோரிக்கை. இந்த வாதத்திற்கு அனுமதி அளித்த பெஞ்சுக்கு நன்றி என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார் ஆச்சார்யா.
ஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது எப்படி குற்றமாகும். அது குற்றமல்ல. வருகிற வருமானம் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இருந்தால்தான் அது குற்றம். மேலும் இந்த சொத்துக்களை வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் ஜெயலலிதாவுடையது என்று நிரூபிக்க முடியுமா? அதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
வருமான வரித்துறையின் வாதம்:
அடுத்து, பிற்பகலில், வருமான வரித்துறை சார்பில் அதன் வாதம் எடுத்து வைக்கப்பட்டது. வருமான வரியைக் கட்டி விட்டதாக கூறி ஜெ. தப்ப முயற்சிப்பதாக ஆச்சார்யா வாதிட்டிருந்தார். வருமான வரியைக் கட்டுவதால் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததை நியாயப்படுத்த முடியாது என்பது ஆச்சார்யாவின் வாதம். இதுகுறித்து வருமான வரித்துறை தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தது.
அதைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர். இந்த வழக்கில் சுப்பிரமணிய சுவாமி தனது தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக தர ஏற்கனவே நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். அதன்படி சு.சுவாமி இன்று எழுத்துப்பூர்வ வாதத்தை சமர்ப்பித்தார்.
இதை தொடர்ந்து, வழக்கில் அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்தது. வழக்கில் தொடர்புள்ள நிறுவனங்கள் தங்களை விடுவிக்க கேட்டு தொடர்ந்த மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. பின்னர் தீர்ப்பு எப்போது என்ற விவரம் தெரியவரும்.












Click it and Unblock the Notifications