அதிமுகவுக்கு துணை சபாநாயகர் பதவி தந்த மோடிக்கு ஜெயலலிதா நன்றி
டெல்லி: லோக்சபா துணை சபாநாயகர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தம்பித்துரை வெற்றி பெற ஆதரவு கொடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து தொலைபேசியில் பேசினார்.
லோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு அதிமுக எம்.பி. தம்பித்துரை போட்டியிட்டார். பாஜக ஆதரவுடன் களம் நின்ற அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதையடுத்து தம்பித்துரை போட்டியின்றி தேர்வானார்.
இதையடுத்து இன்று மாலை பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் ஜெயலலிதா, தம்பித்துரைக்கு லோக்சபா துணை சபாநாயகர் தேர்தலில் ஆதரவு கொடுத்ததற்காக மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதுதொடர்பாக அவர் கடிதம் ஒன்றையும் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
லோக்சபாவில் 3வது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. பாஜக, காங்கிரஸுக்கு அடுத்த இடத்தில் அதிமுக உள்ளது. அதேசமயம் ராஜ்யசபாவில் பாஜக பலவீனமாகவே உள்ளது. அங்கு 46 எம்.பிக்கள்தான் பாஜகவுக்கு உள்ளனர். அதிமுகவுக்கு 10 எம்.பிக்கள் ராஜ்யசபாவில் உள்ளனர். எனவே ராஜ்யசபாவில் அதிமுகவின் உதவி பாஜகவுக்குத் தேவைப்படுகிறது. இதையெல்லாம் கணக்கில் வைத்தே லோக்சபா துணை சபாநாயகர் பதவியை அதிமுகவுக்குக் கொடுத்துள்ளது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.