கச்சத்தீவு மீட்பு வழக்கு: கருணாநிதிக்கு பதில் டிஆர் பாலுவை மனுதாரராக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க கோரி தொடரப்பட்ட வழக்கை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க இருக்கிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததை செல்லாது என அறிவிக்க கோரி முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, ஏகே செல்வராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் விசாரணை 2020-ம் ஆண்டு நடைபெற்றது. இதன் பின்னர் 5 ஆண்டுகள் கழித்து இன்று கச்சத்தீவு வழக்கு விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது கருணாநிதிக்கு பதில், திமுக பொருளாளர் டிஆர் பாலுவை மனுதாரராக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை, மத்திய அரசு 1974-ம் ஆண்டு இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தது. இது தொடர்பாக 1974, 1976-ம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்ததால் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

இந்த நிலையில் இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்த ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2008-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல ஏகே செல்வராஜூம் வழக்கு தொடர்ந்தார். பின்னர் மற்றொரு முன்னாள் முதல்வர் கருணாநிதியும் கச்சத்தீவு விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை 2009-ம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது. இதன் பின்னர் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டதால் வழக்கை விரைந்து விசாரிக்க கோரி 2012-ல் உச்சநீதிமன்றத்தை நாடினார் ஜெயலலிதா. பின்னர் ஜெயலலிதா மறைந்த நிலையில் அவரது வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதேநேரத்தில் செல்வராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
இந்த வழக்கு கடந்த 2020-ம் ஆண்டு விசாரிக்கப்பட்டது. அதன் பின்னர் விசாரிக்கப்படாமல் கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா முன்னிலையில் கச்சத்தீவு வழக்கு விசாரணைக்கு வந்தது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, திமுக தலைவராக இருந்த கருணாநிதி தொடர்ந்த வழக்கில் அவர் மறைந்ததால் அவருக்கு பதில் திமுக பொருளாளரான டிஆர் பாலுவை மனுதாரராக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications