வாரணாசியில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஐ. ஜனதா தளம் ஆதரவு! சரத் யாதவ் பிரசாரம்!!
டெல்லி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியைத் தோற்கடிக்க ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் எம்.எல்.ஏ.வும் போட்டியிடுகின்றனர். இத் தொகுதியில் மே 12-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
வாரணாசி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த கேஜ்ரிவால் மீது கற்களும், செங்கற்களும் சரமாரியாக வீசப்பட்டன. ஆனாலும் ஆம் ஆத்மியினர் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மோடியை தோற்கடிப்பதற்காக அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிப்பதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் கே.சி. தியாகி கூறுகையில், எங்களுடைய கட்சி ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் "முதலாளித்துவம் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிரானவர்". ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவும் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாரணாசியில் பிரசாரம் செய்வார் என்றார்.