முசாபர்நகர் கலவரத்தை தூண்டிய பாஜக எம்எல்ஏக்களுக்கு பாராட்டு விழாவா: ஜனதா தளம்(ஐ) கண்டனம்!
பாட்னா: உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு பாரட்டு விழா நடத்தியதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இரு பிரிவிவினரிடையே ஏற்பட்ட கலவரத்தில். 62 பேர் உயிரிழந்தனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து அகதிகளாக முகாம்களில் வசித்து வருகின்றனர்
இந்த வழக்கில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சங்கீத் சோம், சுரேஷ்ராணா உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில் பாஜக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவர்கள் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தது நீதிமன்றம்.
அத்துடன் இருவருக்கும் ஜாமீனும் கிடைத்தது. ஜாமீன் கிடைக்கப்பெற்ற இரண்டு எம்எல்ஏக்களுக்கும் பாராட்டு விழா நடத்த பாஜவினர் முடிவுசெய்தனர். பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் ஆக்ரா கூட்டத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவர் சரத்யாதவ் கூறுகையில், பாராட்டு விழா நடத்தியது மிகவும் கண்டத்திற்குரியது. இதன் மூலம் அவர்களின் உண்மையான முகம் நாட்டு மக்களுக்கு தெரிந்துள்ளது, புத்திசாலித்தனமாக மோடி வருகைக்கு முன் பாராட்டுவிழா நடத்தியுள்ளனர். முகாம்களில் வாழும் 50 ஆயிரம் மக்களுக்கு பாஜக தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றார்.