ஒரு வேளை குமாரசாமியே முதல்வராக முடிவெடுத்து விட்டால்?
Recommended Video

பெங்களூரு: கர்நாடகா சட்டசபைக்கு கடந்த 12-ந் தேதி பதிவான வாக்குகள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா? பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நொடிக்கு நொடி எகிறுகிறது.
காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் சற்றேறக்குறைய சம பலத்துடன் முன்னேறி வருகின்றன. அதேநேரம் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் சத்தமில்லாமல் 40 தொகுதிகளுக்கு மேல் லீடிங்கில் உள்ளது. இதனால் அரியாசனத்தை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளார் குமாரசாமி. இவரது கட்சியை தவிர்த்துவிட்டு யாராலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தேவ கவுடா மற்றும் குமாரசாமி கைகாட்டும் நபர்தான் முதல்வராக முடியும். மதச்சார்பற்ற ஜனதா தளம் இன்னும் கூடுதலான இடங்களை பெறும் பட்சத்தில், பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே குமாரசாமியிடம் அதிகாரப்பகிர்வு குறித்து பேசுவதற்கு வாய்ப்புள்ளது.
தொங்கு சட்டமன்றம் அமையும் நிலை ஏற்பட்டால் மாநிலக் கட்சியுடன் கைகோர்க்க தயார் என காங்கிரஸ் ஏற்கனவே கூறியுள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சித்தராமய்யாவால் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர முடியாது. பா.ஜ.க.வும் அதே ரீதியில் சிந்திக்கக் கூடும். ஏனென்றால் காங்கிரஸ் அல்லாத இந்தியா என்பதுதான் மோடியின் முழக்கம். எனவே காங்கிரஸை ஆட்சியில் அமர விடாமல் செய்ய மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோர்க்க பா.ஜ.க. தயங்காது.
அதேநேரம், ஆதரவு வேண்டும் என்றால் அதிகாரப்பகிர்வுக்கு தயாரா என்ற நிபந்தனையை குமாரசாமி முன்வைப்பார். அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஆதரவு என்ற நிலைப்பாட்டை குமாரசாமி எடுத்தால், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் நிலைமை சற்றே சிக்கலில் தான் இருக்கும். எனவே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கிறார் குமாரசாமி.
கிங் மேக்கர் என்ற நிலையில் இருக்கும் அவர், தானே ராஜாவாக முடிவெடுத்து விட்டால் வேறு வழியில்லாமல் கூட்டணி ஆட்சிக்கு காங்கிரஸ் அல்லது பாஜக முன்வர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications