காங்கிரசுக்கு பின்னடைவு.. ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் ஆப்சென்ட்.. ராகுல், பிரியங்கா முடிவு?
ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யாமல் தவிர்க்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சிபு சரணின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன், காங்கிரஸ் இங்கு கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
மொத்தமுள்ள 81 தொகுதிகளில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதாதளம் 7 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் வெளியானது. கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பெயர்களும் இதில் இடம் பெற்றன. ஆனால், ஜார்க்கண்டில் பிரசாரம் செய்யாமல் ராகுல் காந்தி வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
உத்தரபிரதேசத்தை தாண்டி, பிரச்சாரம் செய்ய, பிரியங்கா காந்தி, விரும்பவில்லை என்றும், ராகுல் காந்தியை பொறுத்தளவில், அவர் லோக்சபா தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சி விவகாரங்களில் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும், அதையே இப்போதும் தொடரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயோத்தி சர்ச்சையை அரசியலாக்கியது காங்கிரஸ்தான் காரணம்- பிரதமர் நரேந்திர மோடி
எனவே, உடல்நலக்குறைவால் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கும், காங்கிரசின் தற்காலிக தலைவரான சோனியா காந்தி, ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். இது அக்கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இருப்பினும், ராகுல் காந்தியை ஒரு சில கூட்டங்களிலாவது பங்கேற்கச் செய்ய காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
தனது அரசியல் வருகை எதிர்பார்த்த வெற்றியை கட்சிக்கு பெற்று தரவில்லை என்பதில் பிரியங்காவும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலிலும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவருமே, தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.