ஜார்க்கண்டில் மாவோயிட்டுகள் தாக்குதல்: ரயில் தண்டவாளம் தகர்ப்பு
பொகோரோ: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் ரயில் தண்டவாளம் ஒன்று தகர்க்கப்பட்டது. 5ஆம் கட்டத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் 6 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கிரிதி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொகோரோ மாவட்டத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தை மாவோயிஸ்ட்டுகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர்.
வெவ்வேறு இடங்களில் மொத்தம் 10 குண்டுகளை மாவோயிஸ்ட்டுகள் வெடிக்கச் செய்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
இதனால், தானியா மற்றும் ஜெகதீஷ்வர் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜார்க்கண்டை நோக்கி வரும் ரயில்களும் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. பிஸ்தூரில் உள்ள காவல்நிலையத்தை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.