ஜார்கண்ட்: எதிர்க்கட்சிகளின் பலவீனத்தை பலமாக மாற்றிய பாஜக
டெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதல்வராக ஹேமந்த் சோரன் உள்ளார்.ஜார்கண்டில் உள்ள 81 தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஜார்கண்டில் ஆளும் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணிக்கு இடையிலான தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கூட்டணி முறிந்தது.
கடந்த மக்களவை தேர்தலில், ஜார்கண்டில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 12 இடங்களை பாஜ கைப்பற்றியது. இதையடுத்து சட்டசபை தேர்தலிலும் தனித்து களம் இறங்க பாஜ முடிவு செய்தது.
ஜார்கண்டில் ஆளும் கட்சி மீதான அதிருப்தி அதிகமாக இருந்தது. இதை கூறி காங்கிரஸ் வாக்கு வேட்டையாடலாம் என்றால் அதுவும் முடியாது. ஏனெனில் சமீப காலம் வரை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும், காங்கிரசும் கூட்டணியில் இருந்தவை. எனவே இதன் லாபம் முழுக்க பாஜகவுக்கே கிடைக்க வாய்ப்பு இருந்தது.
ஜார்கண்டில் பாஜக, காங்கிரஸ், ஜார்கண்ட் முக்திமோர்ச்சா இதுதவிர, ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகளிடையே நான்கு முனை போட்டி உருவானது. இதனால் ஆதாயம் பாஜகவுக்கே கிடைத்துள்ளது. ஒருவேளை காங்கிரசும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் ஒரே கூட்டணியில் இருந்திருந்தால் கட்சிகளின் வாக்கு வங்கி பலன் கொடுத்திருக்கும். ஆனால் இப்போது வாக்குகள் சிதறிவிட்டன.
மேலும் ஜார்கண்ட் மாநிலத்திலும் மோடி அலை வீசியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மாநிலத்தில் ஆட்சிக்கு எதிராக உருவாகியிருக்கும் அலையை, மோடி அலை கபளீகரம் செய்து பாஜகவுக்கு பெரும் வெற்றியை ஈட்டித்தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் பாஜக கேட்டதைப்போல, எங்களுக்கு முதல்முறையாக ஒரு வாய்ப்பை தாருங்கள் என்று இங்கு பாஜக கேட்கவில்லை. ஏற்கனவே ஜார்கண்டில் பாஜக ஆட்சி செய்துள்ளது.
எனவே எதிர்க்கட்சிகளின் பலவீனம் ஜார்கண்டில் பாஜகவுக்கு பலமாக மாறியுள்ளது என்றே கூறவேண்டும்.