பீகார் முதல்வர் பேரனை துவைத்தெடுத்த 2 "சரக்கு" வியாபரிகள் கைது
பாட்னா: பீகார் முதல்வரின் பேரனுக்கு தர்ம அடி கொடுத்த மது வியாபாரிகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் ஜெஹனாபாத் மாவட்டத்தின் ராணிப்பூர் கிராமத்தில் இருக்கும் மதுக்கடைகளில் சில தினங்களுக்கு முன் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர்.
இந்த ரெய்டு அதே கிராமத்தை சேர்ந்த முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்ஜியின் பேரன் அமித் மாஞ்ஜியின் உத்தரவுப்படி நடத்தப்பட்டதாக மதுக்கடை உரிமையாளர்கள் கருதி உள்ளனர்.

இதையடுத்து, நேற்றிரவு அந்த வழியாக வந்த அமித் மாஞ்ஜியை மதுக்கடை உரிமையாளர்கள் சிலர் கும்பலாக சூழ்ந்து கொண்டு கடுமையாக தாக்கி தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அமித் மாஞ்ஜி, அப்பகுதி போலீசாரிடம் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்திருக்கிறார்.
அமித் மாஞ்ஜியின் புகாரை பெற்று கொண்ட போலீசார் உடனே களத்தில் இறங்கி நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நடந்த ஜெஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மக்தூம்பூர் தொகுதி எம்.எல்.ஏ தான் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்ஜி என்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications