லஷ்கர் தலைவர் சயீத் ஆதரவுடன் "அப்சல் குரு" நிகழச்சி நடந்ததாக ராஜ்நாத் சிங் புதுத் தகவல்
டெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தீவிரவாதி அப்சல் குருவின் புகழ்பாடி நடந்த நிகழ்ச்சிக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஹபீஸ் சயீதின் ஆதரவு இருந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு புகழ்பாடி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது அப்சல் குருவை பாராட்டியும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்ட மாணவர்கள் சங்க தலைவர் கன்ஹையா குமார் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது கைதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தனது மகனை தீவிரவாதி என்று கூற வேண்டாம் என கன்ஹையாவின் தாய் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த சம்வவத்திற்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதின் முழு ஆதரவு இருந்துள்ளது. எப்பொழுது எல்லாம் இது போன்று நடந்து இந்தியாவுக்கு எதிராக கோஷம் கேட்கிறதோ அப்பொழுது எல்லாம் அரசியல் கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கன்ஹையா வழக்கை சிறப்பு பிரிவுக்கு மாற்றுமாறு உள்ளூர் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.