ஜேஎன்யூ கன்னையா குமார், உமர் காலித்தை சுட்டுக் கொல்லுங்கள்... புதிய போஸ்டரால் மீண்டும் சர்ச்சை
டெல்லி: டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜேஎன்யூ) மாணவர் சங்கத் தலைவர்கள் கன்னையாகுமார், உமர் காலித்தை சுட்டுக் கொல்வோம் என மிரட்டல் விடுத்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டார். அப்சல் குருவுக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பேதும் இல்லை என்ற போது தேசத்தின் கூட்டு மனசாட்சி யாருக்கேனும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என கருதுவதாகக் கூறி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். ஆனால் அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கவில்லை.

இந்நிலையில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளை டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் அனுசரித்தனர். ஆனால் அந்த கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக கூறி மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். அதேபோல் உமர் காலித் உள்ளிட்ட பல மாணவர்கள் மீதும் தேசதுரோக வழக்குகள் பாய்ந்தன.
பின்னர் கன்னையாகுமார் உள்ளிட்டோர் முழக்கங்களை எழுப்பும் வீடியோவில் வேண்டுமென்றே இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை சிலர் சேர்த்திருப்பதும் அதை ஊடகங்கள் ஒளிபரப்பியதும் அம்பலமானது. இதனிடையே கன்னையாகுமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் கன்னையாகுமாரின் நாக்கை வெட்டினால் ரூ5 லட்சம்; சுட்டுக் கொன்றால் ரூ11 லட்சம் என இந்துத்துவா அமைப்பினர் அறிவிக்க பெரும் பதற்றம் ஏற்பட்டது.
தற்போது ஜே.என்.யூ. வளாகத்தில் கன்னையாகுமார், உமர் காலித் உள்ளிட்டோர் படங்களுடன் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் தேசதுரோகிகளான இவர்களை சுட்டுக் கொல்லுங்கள் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
இந்த போஸ்டரை பல்பீர்சிங் பாரதியா என்பவர் ஒட்டியுள்ளார். இவர் அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். அத்துடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்தும் அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இப்புதிய போஸ்டரால் பெரும் சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications