”முறை தவறுகின்றதா முறைசாரா வேலைவாய்ப்புகள்?” – பெரும் சரிவைக் காணும் இந்தியா
டெல்லி: இந்தியாவில் முறைசாரா பிரிவில் வேலைவாய்ப்புகள் பெரும் சரிவைக் கண்டுள்ளதாம். அதாவது 6 சதவீத அளவுக்கு சரிந்துள்ளதாக அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இதுதொடர்பாக இந்தியாஸ்பெண்ட் இணையதளம் வெளியிட்டுள்ள ஆய்வுச் செய்தியில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறை சார் தொழில் பிரிவில் ஏற்கனவே வேலைவாய்ப்புகள் சரிவைக் கண்டுள்ள நிலையில் தற்போது முறை சாராத பிரிவிலும் இதே நிலை காணப்படுகிறது.
செமத்தியான அடி:
இந்தியாவின் வேலைவாய்ப்புகளில் 72 சதவீதத்தை முறை சாராத பிரிவுதான் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பே கிடையாது:
இவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு சுத்தமாக இல்லை. சுகாதார இன்சூரன்ஸ் இல்லை. பல்வேறு பயன்களும் கிடைப்பதில்லை. மேலும் எழுதப்பட்ட ஒப்பந்தங்களும் இவர்களுக்கு இருப்பதில்லை.
10.2 லட்சம் பேர்:
2011-12 ஆம் ஆண்டில் 47.2 கோடி தொழிலாளர்களில் 34 கோடிப் பேர் முறைசாராத தொழிலில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆண்டுதோறும் 10.2 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
குறைந்து வரும் வேலைவாய்ப்பு:
அகில இந்திய அளவில் 2004-05 ஆம் ஆண்டில் முறைசாரா தொழில் பிரிவில் 78 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. அதேசமயம், இவர்களின் அளவு 2009-10 இல் 71 சதவீதமாகவும், 2011-12 இல் 72 சதவீதமாகவும் இருந்தது.
ஊரகப் பகுதிகளில் வேலை:
முறைசாரா தொழில் பிரிவில், விவசாயம் அல்லாத துறையில் 86 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. இவர்களுக்கு ஊரகப் பகுதிகளில் வேலை கிடைத்தது. 98 சதவீதம் பேருக்கு நகர்ப்புறங்களில் வேலை கிடைத்தது.
விவசாயமில்லாத பிரிவு:
விவசாயம் அல்லாத பிரிவில் 95 சதவீதம் பேர் நகர்ப்புற பெண்கள் ஆவர். 99 சதவீதம் பேர் நகர்ப்புற ஆண்கள் ஆவர். ஊரகப் பகுதிகளில் வேலை கிடைத்தவர்களில் 94 சதவீதம் பேர் ஆண்கள், 63 சதவீதம் பேர்தான் பெண்கள் ஆவர்.
ஆண்களுக்கே வாய்ப்பு அதிகம்:
இதன் மூலம் விவசாயம் அல்லாத துறைதான் அதிக அளவில் வேலைவாய்ப்பை கொடுப்பது தெரிய வருகிறது. குறிப்பாக ஊரகப் பகுதிகளில் ஆண்களுக்கே அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
வேலைவாய்ப்பு பிரிவுகள்:
விவசாயம் அலலாத பிரிவில் உற்பத்தி, கட்டுமானம், மொத்த வியாபாரம், ரீட்டெய்ல் வர்த்தகம், போக்குவரத்து, ஸ்டோரேஜ் ஆகிய பிரிவுகளில்தான் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.
பாவம் பெண்கள்:
அதிலும் உற்பத்தி மற்றும் கட்டுமானப் பிரிவில் ஊரகப் பகுதிகளில் அதிக வேலை கிடைக்கிறது. கட்டுமானப் பிரிவில், ஊரக ஆண்களுக்கே அதிக வேலை கிடைக்கிறது. உற்பத்திப் பிரிவில் பெண்களின் பங்கு ஊரகப் பகுதிகளில் 36 சதவீதமாக 2011-12 இல் இருந்தது.
ரீட்டெய்ல் பிரிவு:
நகர்ப்புறங்களில் ரீட்டெய்ல் பிரிவு அதிக வேலையைத் தருகிறது. அதாவது 28 சதவீதமாக இது இருந்தது. அடுத்த இடத்தை உற்பத்திப் பிரிவு பெறுகிறது. இதில் நகர்ப்புற ஆண்களுக்கு 31 சதவீதமும், உற்பத்திப் பிரிவில் நகர்ப்புற பெண்களுக்கு 43 சதவீத வேலைவாய்ப்பும் கிடைத்தன.
முறைசாரா பிரிவில் பலனில்லை:
முறைசாரா பிரிவில் யாருக்கும் எந்த பலனும் கிடைப்பதில்லை. எந்த சலுகையும் கிடைப்பதில்லை. இவர்களில் காஷுவல் தொழிலாளர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
முறையான காண்டிராக்ட் கிடையாது:
இவர்களில் 97 சதவீதம் பேருக்கு எழுதப்பட்ட ஒப்பந்தம் அதாவது காண்டிராக்ட் கிடையாது. 93 சதவீதம் பேருக்கு சமூக பாதுகாப்பு பலன் கிடைப்பதில்லை. இன்சூரன்ஸ், பென்ஷன் ஆகியவை கிடைப்பதில்லை.
கவலைக்கிடமான கட்டுமானப்பிரிவு:
ஊரகப் பகுதிகளில் கட்டுமானப் பிரிவில் வேலை பார்ப்பவர்கள் நிலைதான் கவலைக்கிடமாக உள்ளது. பாதிப் பேருக்கு எந்தப் பலனும், சலுகையு் கிடைப்பதில்லை. நகர்ப்புறங்களில் உற்பத்திப் பிரிவில் பணியாற்றுவோரில் பாதிக்கும் கீழானோர் இந்த நிலையை சந்திக்கின்றனர்.
குறைந்த ஊதியம்:
முறைசாரா தொழிலில் பெண்கள் தான் அதிக பாதிப்பை சந்திக்கின்றனர். நகர்ப்புறங்களில் அவர்களுக்கான தினசரி கூலியானது ரூ. 194 ஆக உள்ளது. அதுவே ஆண்களுக்கு ரூ. 258 கூலியாக தரப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் ஆண்களுக்கு ரூ. 189ம், பெண்களுக்கு ரூ. 121ம் கூலியாக கிடைக்கிறது.