20 பெண்கள் பலாத்காரம்! ஐஏஎஸ் அதிகாரி மீது பரபர புகார்.. ஊழியரின் பகீர் வாக்குமூலம்! அந்தமான் கொடூரம்
போர்ட் பிளேயர்: அந்தமான் நிகோபார் தீவுகளின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரேன் வேலை வாங்கி தருவதாகக் கூறி பெண்களைப் பலாத்காரம் செய்த விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தமான் தீவுகளைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் பரபர புகாரை அளித்து இருந்தார். அரசு வேலை வாங்கி தருவதாக உயர் அதிகாரிகள் தன்னை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறி இருந்தார்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஜிதேந்திர நரேன் மற்றும் அப்போது தொழிலாளர் ஆணையராக இருந்த ரிஷியை குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவனின் கை.. சென்னை ஏர்போர்ட்டில் பரபர.. அந்தமான் குடும்பத்தின் பயணம் ரத்து!
விசாரணை
ஜிதேந்திர நரேன் அந்தமான் தீவுகளின் தலைமைச் செயலாளராக இருந்த போது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஜிதேந்திர நரேனை சஸ்பெண்ட் செய்து உள் துறை உத்தரவிட்டது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக இரு நாட்கள் ஜிதேந்திர நரேனிடம் சிறப்புப் புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். விரைவில் இதில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
20 பெண்கள்
இந்தச் சூழலில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி நரேன் குறித்து மேலும் சிலர் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்தமான் நிகோபார் தலைமைச் செயலாளராக இருந்த போது, ஜிதேந்திர நரேன் சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களை இப்படி அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பலாத்காரம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவங்கள் எல்லாம் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயர் இல்லத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
என்ன நடந்தது
பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களில் சிலருக்கு அரசு வேலை வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை செய்யச் சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறிய தலைமைச் செயலாளரின் இல்லத்திற்கு இளம் பெண்களை அழைக்கும் இவர்கள், அங்கு வைத்து அப்பாவி பெண்களைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இடைக்கால ஜாமீன்
ஜிதேந்திர நரேனுக்கு கொல்கத்தா ஐகோர்ட் இப்போது இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், இது தொடர்பாக சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளனர். மறுபுறம் நீதிமன்ற உத்தரவின்படி நரேனிடம் கடந்த இரு நாட்களாக இந்த விவகாரம் தொடர்பாக ஜிதேந்திர நரேனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மொபைல் சிக்னல்
பலாத்காரம் நடந்ததாக அந்த பெண் கூறும் நேரத்தில் ஜிதேந்திர நரேன், ரிஷி மற்றும் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஒரே இடத்தில் இருந்ததை அவர்களின் செல்போன் சிக்னல்கள் உறுதி செய்கிறது. அதேபோல நரேன் அந்தமானில் இருந்து டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட போது, அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.
வாக்குமூலம்
இது தொடர்பாகத் தலைமைச் செயலாளரின் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் கூறுகையில், "நரேன் இங்கு இருந்த போது, அவர் பெண்களை அழைத்து வருமாறு கூறுவார். அதன் பின்னர் உணவை வாங்கி வருமாறு அனுப்பிவிடுவார். கொஞ்ச நேரம் கழித்து அந்த பெண்களை குறிப்பிட்ட இடத்தில் விடுமாறு கூறுவார்" என்று கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. இருப்பினும், தனக்கு எதிராக சிலர் சதித்திட்டம் தீட்டுவதாகவும் தன் மீது எந்தவொரு தவறும் இல்லை என்றும் ஜிதேந்திர நரேன் தெரிவித்து உள்ளார்.