நாட்டு சரக்க விடுங்க 'ரம்' வேணும்னா ராணுவத்தில் சேருங்க... மத்திய அமைச்சரின் இதுவல்லவோ ஆலோசனை!
தலித் இளைஞர்கள் நாட்டு சரக்கு குடிப்பதைவிட ராணுவத்தில் சேர்ந்தால் ரம் குடிக்கலாம் என்று மத்திய இணைஅமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புனே : தலித் இளைஞர்கள் நாட்டு சரக்கு குடிப்பதை விட்டு விட்டு ராணுவத்தில் சேர்ந்தால் ரம் குடிக்கலாம் என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ்
அத்வாலே கூறியிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்குதல் துறையின் இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே புனேயில் செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்து சர்ச்சை கிளப்பியுள்ளது. அவர் கூறியுள்ளதாவது : "தலித் இளைஞர்களுக்கு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் இட ஒதுக்கீடு கேட்டு வருகிறோம். ஏனெனில் இவர்கள் போராளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள், நாட்டிற்காக தியாகம் செய்யத் தயங்காதவர்கள்.
தலித் இளைஞர்கள் ராணுவத்தில் சேருவது வீரமரணத்திற்கு ஒப்பானது என்று நினைத்து விடக்கூடாது. இதைவிட பலர் சாலை விபத்து, ஹார்ட் அட்டாக் உள்ளிட்டவற்றில் சிக்கி உயிரை விடுகின்றனர்.
நாட்டுச் சரக்கை குடிப்பதற்கு பதில் ராணுவத்தில் சேர்ந்தால் தலித் இளைஞர்களுக்கு குடிக்க ரம் மற்றும் நல்ல உணவு கிடைக்கும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவத்தில் தலித் இளைஞர்களுக்கான இடஒதுக்கீடு என்பதே தங்கள் கட்சியின் நீண்ட கால கோரிக்கை என்று அத்வாலே கூறியுள்ளார்.
இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். என்னைக் பொறுத்தமட்டில் ஏராளமான தலித் சமூகத்தினர் ராணுவத்தில் சேர வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.