சில நொடிகளில் மண்ணில் புதைந்த கோயில்! அடுத்தடுத்து ஜோஷிமத்தில் நடக்கும் "சம்பவம்!" அச்சத்தில் மக்கள்
திஸ்பூர்: உத்தரகண்ட்டில் ஜோஷிமத் நகரம் இப்போது வினோதமான ஒரு பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. அந்த சரியும் இமயமலை நகரத்தில் இருந்து மக்களை வெளியேற்ற அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியுள்ளது.
உத்தரகண்ட்டில் இமயமலை அருகே அமைந்துள்ள அழகிய நகரமான ஜோஷிமத் நகரத்தில் உள்ள ஒரு கோயில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்தது.. அங்குள்ள சுமார் 600 வீடுகளில் மண் சரிவால் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அங்கு பொதுவாகவே குளிர் அதிகமாக இருக்கும். அதுவும் இதுபோன்ற குளிர் காலங்களில் சொல்லவே தேவையில்லை. இப்போது வீடுகளிலும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதால், பொதுமக்கள் வீதிகளில் முகாமிட்டுள்ளனர்.

ஜோஷிமத்
பாதிக்கப்பட்டுள்ள இந்த ஜோஷிமத் நகரத்திற்கு உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி விரைவில் நேரில் பார்வையிட உள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை வெளியேற்றி தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்வதற்காக வல்லுநர் குழு ஜோஷிமத் விரைந்துள்ளது. இதனால் சுமார் 3,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோஷிமத் நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார். இது அங்கு வசிக்கும் மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் அதிகமாகும். இந்த நகர் இந்து மற்றும் சீக்கிய புனித யாத்திரைகளுக்கான நுழைவுப் பகுதியாக உள்ளது.

திடீர் விரிசல்
மேலும், இந்தியச் சீன எல்லைக்கு அருகே உள்ள இந்த நகரத்தில் இருந்து சில கிமீ தூரத்தில் இந்திய ராணுவத்தின் தளமும் அமைந்துள்ளது. இந்த நகரின் முக்கிய சாலைகள் மற்றும் வீடுகளில் கடந்த சில நாட்களாக விரிசல் ஏற்படத் தொடங்கியது. இந்தச் சூழலில் தான் நேற்று திடீரென கோயில் ஒன்று சரிந்தது. இருப்பினும், நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இங்கு மட்டுமின்றி.. அருகிலுள்ள அவுலி நகரிலும் இதேபோன்ற பிரச்சனை ஏற்படத் தொடங்கியுள்ளன. இதனால் அங்கு அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், நீர்மின் நிலையம், சார் தாம் சாலை உள்ளிட்ட புதிய கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

உத்தரகண்ட் அரசு
இதனால் பாதிக்கப்பட்டு வீடுகளை காலி செய்ய வேண்டியவர்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு வாடகையாக மாதம் 4,000 ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என உத்தரகண்ட் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழு ஜோஷிமத் நகருக்கு விரைந்துள்ளது. இப்பகுதியில் நிலம் சரிந்து வருவதால், நிலைமை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் உத்தரகண்ட் அரசு தெரிவித்துள்ளது.

என்ன காரணம்
நிலநடுக்கங்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஒன்றான இங்கு, மண் சரிவும் நாளுக்கு நாள் மோசமாகி வருவதால், ஏற்கனழே 40 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். உத்தரகண்ட் அரசு நிரந்தர தீர்வை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். நிலைமை சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உத்தரகண்ட் அரசும் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் நிலையான மிக வேகமான நகரமயமாக்கலே இந்த பேரழிவுக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.ஹைடல் மின் உற்பத்தி நிலையங்களுக்காகத் தோண்டப்பட்ட சுரங்கங்களே இதற்குக் காரணம் என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.

உள்ளூர் மக்கள்
அப்பகுதிகளில் சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், பைபாஸ் சாலைகள் அமைப்பதற்கும் தொடர்ந்து பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கப்படுவதும் ஒரு காரணம் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருவதாகவும் இதனால் பொதுமக்கள் அச்சத்தில் வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து அரசு பல ஆண்டுகளுக்கு முன்னரே நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்க வேண்டும்.. ஆனால், நிலைமை கையை மீறிச் சென்ற பிறகே அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் உள்ளூர் மக்கள் சாடியுள்ளனர்.

நிரந்தர தீர்வு
மொத்தம் 561 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சாமோலி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வீடுகள் மட்டுமின்றி விடுதிகளும், கடைகளும் கூட இதில் பாதிக்கப்பட்டுள்ளன. சிலர் அங்கிருந்து வெளியேறிவிட்ட போதிலும், பலரும் அங்கேயே வசித்து வருகின்றனர். உத்தரகண்ட் அரசு தங்களுக்கு நிரந்தர தீர்வை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 6,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரம், இமயமலையில் ஏறும் பயணங்களுக்கும் நுழைவாயிலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications