பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுக்க குவிந்த டெல்லி பத்திரிக்கையாளர்களால் பரபரப்பு
டெல்லி: டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள பத்திரிக்கையாளர்கள் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி "தீபாவளி மிலான் " எனும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருமாறு பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். மோடி நிகழ்ச்சி முடிந்து மேடையில் இருந்து கீழே இறங்கி கொஞ்ச தூரம் நடந்து சென்ற போது திடீரென ஒரு பெண் பத்திரிக்கையாளர் எழுந்து தனது கைபேசியில் செல்ஃபி எடுத்தார். பிரதமரின் பாதுகாவலர்கள் அவரை தடுத்தனர், உடனே குறுக்கிட்ட மோடி பரவாயில்லை எடுத்துக்கொள்ளட்டும் எனக் கூறி அந்த பெண் பத்திரிக்கையாளரை செல்ஃபி எடுத்துக்கொள்ள அனுமதித்தார்.

அதனைக் கண்ட மற்ற பத்திரிக்கையாளர்களும் மோடியுடன் செல்ஃபி எடுக்க விருப்பம் தெரிவித்து அவரை சூழ்ந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர் அங்கு வந்து அனைவரையும் விலகிச் செல்லும்படி தெரிவித்தார்.
அதற்கு மோடி ஒவ்வொருவராக வந்து எடுத்துக்கொள்ளுமாறு கூறியதையடுத்து கூட்டம் சற்று கட்டுக்குள் வந்தது. கடந்த ஆண்டும் தீபாவளி மிலன் நிகழ்ச்சியின்போது பத்திரிகையாளர்கள் மோடியுடன் புகைப்படம் எடுக்க போட்டிபோட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இந்திய திருவிழாக்கள் சமுதாயத்துக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாகவும், நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பறை சாற்றும் விதமாகவும் அமைந்துள்ளன. ஒளியைக் கொண்டாடும் தீபாவளி பண்டிகையில் பாகுபாடு இல்லை. இது சமுதாயத்தின் சமநிலையை பறைசாற்றுகிறது என்றார்.
நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த அமைச்சர்கள் அருண் ஜெட்லி, வெங்கைய நாயுடு, ஸ்மிருதி இராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமருடன் செல்ஃபி எடுக்க விரும்பாத பத்திரிக்கையாளர்கள் மத்திய அமைச்சர்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications