லோக்சபாவில் 2ஜி அறிக்கை தாக்கல்: தி.மு.க வெளிநடப்பு
டெல்லி: மக்களவையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இமாலய ஊழல் எனப்படும், '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த ஊழல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்வதற்காக, ஜே.பி.சி., எனப்படும் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது.
'இந்த ஊழலில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, எந்த தொடர்பும் கிடையாது. தி.மு.க.,வை சேர்ந்த, அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர், ராஜா வால், பிரதமர் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளார்' என, ஜே.பி.சி., ஏற்கனவே தன் விசாரணை அறிக்கையில் கூறியுள்ளது. இந்த விசாரணை அறிக்கையை, ஜே.பி.சி., தலைவர், பி.சி.சாக்கோ, கடந்த அக்டோபர் மாதம் லோக்சபா சபாநாயகர் மீரா குமாரிடம் வழங்கினார்.
இந்த நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரணை அறிக்கையை அதன் தலைவர் பி.சி.சாக்கோ இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதனை கண்டித்து தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
இந்த அறிக்கையை ஒரு மோசடி அறிக்கை என்று பாஜக, இடதுசாரிகள், திரிணாமுல்காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். பின்னர் அவையின் உள்ளே வந்த திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் சில காகிதங்களை சபாநாயகரின் இருக்கை முன்பு காண்பித்து கூச்சல் எழுப்பினர் இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
எதிர்கட்சிகள் அமளி
இதனிடையே தனி தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கும் விவகாரம் குறித்து அதிமுக உறுப்பினர்கள் மக்களவையில் குரல் எழுப்பினர். முதல் அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதிய பின்னரும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். இதையடுத்து 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியபோது கூச்சல் குழப்பத்திற்கு இடையே மங்கல்யாணை வெற்றிகரமாக செலுத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மதியம் 2 மணி வரை மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
நாள் முழுவதும் ஒத்திவைப்பு
அவை மீண்டும் தொடங்கியதும் முசாபர்நகரில் நிவாரண முகாமில் குழந்தைகள் இறந்தது தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதனை தொடரந்து பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications