மே.வ. தேர்தல்: ஜங்கல் மஹாலில் திரிணாமுல், பாஜகவின் வெற்றியை தீர்மானிக்கும் குர்மி பழங்குடிகள்!
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கக் கூடிய பகுதியாக மாவோயிஸ்டுகளின் மாஜி கோட்டையான ஜங்கல் மஹால் இருக்கிறது. அதுவும் இப்பகுதியின் குர்மி பழங்குடிகள்தான் பாஜக, திரிணாமுல் காங்கிரஸின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகள் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
குர்மி அல்லது குட்மி பழங்குடியினர் மத்திய இந்திய மாநிலங்களில் பரவலாக இருக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு மாநில குர்மி அல்லது குட்மி பழங்குடிகள் குறித்து வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
குர்மி பழங்குடிகள் பூர்வ திராவிட பழங்குடிகள் என்பது ஒரு கருத்து. ஆரிய- திராவிடர் கலப்பினத்தவர் என்பது பீகாரில் நிலவும் கருத்து. ஒடிஷாவில் திராவிடர் பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். வேறு சில மாநிலங்களில் பழங்குடியினர் அந்தஸ்துக்காக போராடுகின்றனர்.

குர்மி பழங்குடிகள்
மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக திகழ்ந்த ஜங்கல் மஹால் பகுதியில் குர்மி அல்லது குட்மி பழங்குடிகள் அதிகம் வசிக்கின்றனர். புருலியா, ஜாக்ராம், மெடினிப்பூர் மற்றும் பங்குரா மாவட்டங்களை உள்ளடக்கியது ஜங்கல் மஹால் பகுதி. மேற்கு வங்கத்தின் 42 சட்டசபை தொகுதிகள் அதாவது 6 லோக்சபா தொகுதிகள் இந்த ஜங்கல் மஹால் பகுதியில் வருகின்றன.

வென்ற பாஜக
2019 லோக்சபா தேர்தலில் இந்த 6 தொகுதிகளில் பாஜக 4 இடங்களை கைப்பற்றி மிரட்டல் விடுத்தது. இப்பகுதியில் 42 சட்டசபை தொகுதிகளில் 30 தொகுதிகளில் அதாவது 30 லட்சம் பேர் குர்மி/ குட்மி இனத்தவர் வசிக்கின்றனர்.

சட்டசபை தேர்தலில் தீவிரம்
இந்த குர்மி/ குட்மி இன மக்களின் ஆதரவை தக்க வைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. ஊழல் பிரச்சனையை முன்வைத்து குர்மி இனத்தவரை தம்வசப்படுத்த பாஜக முனைப்பு காட்டுகிறது.

ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ்.
ஜங்கல் மஹால் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஊடுருவி கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறது. இந்த அடிப்படை கட்டமைப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு பாஜக ஆதாயம் அடைந்து வருகிறது. இதனால்தான் 2018-ன் தொடக்கத்தில் இப்பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களை இழுத்து மூடியது மமதா அரசு.

குர்மிகள்- தீர்மானிக்கும் சக்தி
ஜங்கல் மஹால் ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது.. பின்னர் மாவோயிஸ்டுகளின் மய்ய பிரதேசமானது. இதனையடுத்து திரிணாமுல் வசமானது. இப்போது எப்பாடுபட்டாவது காவி கொடியை பறக்க விட வேண்டும் என்பதில் பாஜக படுதீவிரமாக இருக்கிறது. இதனால்தான் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஜங்கல் மஹால் உருவெடுத்து நிற்கிறது.












Click it and Unblock the Notifications