மேற்கு வங்க மனித உரிமை ஆணையர் பதவியிலிருந்து விலகினார் நீதிபதி கங்குலி
டெல்லி: மேற்கு வங்காள மனித உரிமை ஆணைய தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பெண் பயிற்சி வக்கீலிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீதான புகாரை விசாரித்த உச்சநீதிமன்ற குழுவும், அவர் மீது குற்றம் இருப்பதாக உறுதி செய்தது.

இதையடுத்து அவர் வகித்து வந்த மேற்கு வங்க மனித உரிமை ஆணைய தலைவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக நெருக்கடி அதிகரித்து வந்ததால் பதவி விலகுவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தார் கங்குலி.
இந்த நிலையில் அவர் மேற்கு வங்க மாநில ஆளுநரை இன்று நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.முன்னதாக அவர் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சொலி சொரப்ஜியிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பதவி விலகுவதுதான் புத்திசாலித்தனம் என்று சொலி சொரப்ஜி கங்குலிக்கு ஆலோசனை கூறியிருந்தார்.
இது குறித்து சொலி சொரப்ஜி மேலும் கூறுகையில், 'நீதிபதி கங்குலி என்னுடன் டெலிபோனில் பேசும்போது, பதவி விலகுவது பற்றி கூறினார். தன்னைப்பற்றி எவ்வளவோ பேசப்படுவதாகவும், தனது கருத்து கேட்கப்படுவதாகவும் அவர் கூறினார். அதற்கு நான், பதவி விலகுவது புத்திசாலித்தனமான முடிவு என்று கூறினேன்' என்றார்.












Click it and Unblock the Notifications