21வது சட்ட ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ். சவுகான் நியமனம்!
டெல்லி: 21-வது சட்ட ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ். சவுகானை நியமித்து மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் முதல் சட்ட ஆணையம் 1955ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. 20வது சட்ட ஆணையத்தின் தலைவராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி.ஷா இருந்தார்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் சட்ட ஆணையம் ஆலோசனை வழங்கும். ஒரு சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் 3 ஆண்டுகள்.

ஏ.பி.ஷா தலைமையிலான 20வது சட்ட ஆணையத்தின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தது. அவருடைய பதவிக் காலத்தில்தான் பயங்கரவாதம், நாட்டுக்கு எதிராக போர் ஆகிய குற்றங்கள் நீங்கலாக, பிற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை வழங்குவதை ரத்து செய்யலாம் என்ற முக்கியமான பரிந்துரையை வழங்கியது சட்ட ஆணையம்.
21வது சட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது.
இதனடிப்படையில் புதிய சட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கான பரிந்துரை பட்டியலை தயாரிக்கும் பணியில் மத்திய சட்ட அமைச்சகம் ஈடுபட்டு வந்தது.
சட்ட ஆணையத்தில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் பணியமர்த்தப்படுவது வழக்கம்.
தற்போது 21-வது சட்ட ஆணையத்தின் தலைவராக, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.எஸ். சவுகான்; உறுப்பினராக நீதிபதி ரவி ஆர். திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சர் சதானந்த கவுடா அறிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு முதல் நீதிபதி பி.எஸ். சவுகான் காவிரி நடுவர் மன்றத்தின் தலைவராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications