ஜன. 31ல் ஜல்லிக்கட்டு வழக்கு.. நீதிபதிகள் அமர்வில் மாற்றம்
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஜனவரி 31ம் தேதி, விசாரிக்க உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்த நிலையில், நீதிபதி அமர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அறிவிக்கை ரத்து செய்யப்பட்டது. இது உச்சநீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை வழக்கின் எதிர்தரப்பாளர்களான பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதேபோல தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்திற்கு எதிராக, விலங்குகள் நல வாரியம், கியூப்பா போன்ற அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்நிலையில், ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக, விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஏதும் தொடரப்பட்டிருந்தால், அது வாபஸ் பெறப்படும் என வாரியத்தின் செயலர் ரவிக்குமார் தெரிவித்தார்.
ஆயினும் என்.ஜி.ஓக்கள் தொடர்ந்த வழக்கு அப்படியேத்தான் உள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு ஆதரவாக மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதேபோல தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டை அணுகி, ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய மனு தாக்கல் செய்தனர்.
இந்த அனைத்து மனுக்கள் மீதும் ஜனவரி 31ம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. இந்நிலையில் வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதிகள் அமர்வில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை, வழக்கை, தீபக் மிஸ்ரா மற்றும் ரோகிடன் நரிமன் அமர்வு விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், நரிமனுக்கு பதிலாக நீதிபதி அமிதவராய் இந்த அமர்வில் இடம் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications