நீதிபதி கர்ணன் தரப்பு மனுவை அவசர வழக்காக ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்! கைது செய்ய தடையில்லை
டெல்லி: நீதிபதி கர்ணனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் தெரிவித்ததற்காக கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தானாக முன்வந்து பதிவு செய்துள்ள உச்சநீதிமன்றம், அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்துள்ளது.
இதனிடையே கர்ணன் எங்கேயுள்ளார் என தெரியாமல் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து கர்ணன் தரப்பில், சுப்ரீம்கோர்ட்டை இன்று அணுகிய அவரது வழக்கறிஞர், அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனைக்கு தடை கோரும் மனுவை தாக்கல் செய்தார்.
ஆனால், இந்த மனுவை அவசரமாக விசாரித்து, கைது உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மனுவை விசாரிக்க போதிய நீதிபதிகள் இருக்கும்போது, மனு விசாரணைக்கு ஏற்கப்படும் என கோர்ட் உத்தரவிட்டது.
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க கர்ணன் தயாராக இருப்பதாக வழக்கறிஞர் கூறியதையும் சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை. எனவே மேற்கு வங்க போலீசார் கர்ணனை தொடர்ந்து தேடி வருகிறார்கள். அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்.