ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் ஏப்.30-ல் தீர்ப்பு? நீதிபதி குமாரசாமியின் கடிதத்தால் பரபரப்பு!!
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வழங்குவதற்கு ஏப்ரல் 30-ந் தேதி வரை கால அவகாசம் தேவை என்று தலைமை நீதிபதி ஹெச்.எல் தத்துவுக்கு கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் ஏப்ரல் 30-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும் இதர மூவருக்கு தலா ரூ10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தனர். இதனிடையே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச், மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி பெஞ்ச் நீதிபதியை கர்நாடகா உயர்நீதிமன்றம் நியமிக்க வேண்டும்; ஜெயலலிதா தரப்பு எந்த தாமதமும் செய்யக் கூடாது; வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்; தீர்ப்பு வழங்க மேலும் ஒரு மாதம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் தனி பெஞ்ச் நீதிபதியாக குமாரசாமி நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஜனவரி 5-ந் தேதி முதல் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 5-ந் தேதி தொடங்கி மார்ச் 11-ந் தேதியன்று முடித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைப்படி ஏப்ரல் 17-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராவதை எதிர்த்து தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தாங்கள் தீர்ப்பு வழங்கும் ஏப்ரல் 15-ந் தேதி வரை மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை வெளியிட கூடாது என்று இடைக்காலத் தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில் பவானிசிங்கை நீக்கக் கோரும் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று இறுதித் தீர்ப்பளித்தது. நீதிபதிகள் மதன் லோகூர், பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வழக்கில் இருவேறுபட்ட தீர்ப்புகளை அளித்தது.
மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானது சட்டவிரோதம் என்றும் நீதிபரிபாலனத்தை குற்றவாளிகள் தரப்பு வளைப்பதற்கு அரசு வழக்கறிஞர் உடந்தையாக இருந்தார் என்றும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார் நீதிபதி லோகூர்.
ஆனால் நீதிபதி பானுமதியோ, ஒரு வழக்கின் இன்சார்ஜ் ஆக வழக்கறிஞர் நியமிக்கப்படும் போதே அது மேல்முறையீட்டுக்கும் பொருந்தும் என்பதால் பவானிசிங் ஆஜரானதில் தவறில்லை என்று தீர்ப்பளித்தார். மேலும் மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா தனி நீதிபதி பெஞ்ச் குமாரசாமி தீர்ப்பளிக்கத் தடை இல்லை என்றும் அது நீதிபதி குமாரசாமியின் கையில் இருக்கிறது என்றும் நீதிபதி பானுமதி தமது தீர்ப்பில் கூறினார். ஆனால் நீதிபதி லோகூர், மேல்முறையீட்டு தீர்ப்பு வழங்குவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு 3 நீதிபதிகளைக் கொண்ட பெரிய பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டது. இதனால் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எப்போது என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் கர்நாடகா தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குமாரசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தற்போதைய நிலையில் தீர்ப்புக்கு இறுதி வடிவம் தர இயலாத நிலை உள்ளது. இதனால் தீர்ப்பு வழங்க மேலும் 15 நாட்கள் அதாவது ஏப்ரல் 30-ந் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதனால் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் ஏப்ரல் 30-ந் தேதி தீர்ப்பு வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications