உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகிறார் ரஞ்சன் கோகாய்.. அரசுக்கு தீபக் மிஸ்ரா பரிந்துரை
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பெயரை இப்போதைய தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா இவ்வாண்டு, அக்டோபர் 2ம் தேதியோடு பதவி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, மத்திய சட்ட அமைச்சகம், தீபக் மிஸ்ராவிற்கு கடிதம் எழுதி, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என கேட்டது.
சீனியாரிட்டி படி, ரஞ்சன் கோகாய், மிஸ்ராவிற்கு அடுத்த இடத்தில் உள்ளார். அவர்தான் அடுத்த தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
பரபரப்பு பிரஸ் மீட்
ஆனால், கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் கூட்டாக அளித்த பத்திரிகையாளர் பேட்டியில், தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகளை பற்றி விமர்சனம் செய்தனர். இதுபோல உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரஸ் மீட் செய்தது இந்திய வரலாற்றிலேயே அதுதான் முதல் முறையாகும். பிரஸ் மீட் செய்த நீதிபதிகளில் ஒருவர் ரஞ்சன் கோகாய்.
கேள்விகள் எழுந்தன
செல்லமேஸ்வர், மதன் லோக்கூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் பிரஸ் மீட் செய்த மற்ற மூன்று நீதிபதிகளாகும். எனவே, சீனியாரிட்டி படி ரஞ்சன் கோகாய் அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க தகுதியுடையவர் என்றாலும், பிரஸ் மீட் உள்ளிட்ட விவகாரங்களால் அந்த வாய்ப்பு தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விகள் சட்ட வல்லுநர்கள் மத்தியில் எழுந்தன.
பரிந்துரை
ஆனால், அந்த கேள்விகளுக்கு இன்று விடை கிடைத்துள்ளது. ஆம்.. தீபக் மிஸ்ரா இன்று மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமிக்க பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம், உச்சநீதிமன்றத்தின் வழக்கமான நடைமுறையான சீனியாரிட்டிபடியான பதவி உயர்வு தக்க வைக்கப்பட்டுள்ளது. ரஞ்சன் கோகாய், அக்டோபர் 3ம் தேதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.
யார் இந்த ரஞ்சன் கோகாய்?
1954ம் ஆண்டு பிறந்த ரஞ்சன் கோகாய், 1978ம் ஆண்டு, பார் கவுன்சிலில் இணைந்தார். 2001ம் ஆண்டு கவுகாத்தி ஹைகோர்ட்டில் நிரந்தர நீதிபதி அந்தஸ்துடன் பதவியேற்றார். 2010ம் ஆண்டு பஞ்சாப் ஹரியானா ஹைகோர்ட்டுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட ரஞ்சன் கோகாய், 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2012ம் ஆண்டு, பதவி உயர்வு பெற்று, உச்சநீதிமன்ற நீதிபதியாக பணிக்கு வந்தவர் ரஞ்சன் கோகாய்.