ம.பி. முதல்வர் கமல்நாத் முதல் கருத்தே இப்படியா.. கூட்டணி கட்சி தலைவர் அகிலேஷுக்கு கோபம் வந்துடுச்சே
போபால்: மத்திய பிரதேச முதல்வராக பொறுப்பேற்றுள்ள கமல்நாத் தெரிவித்துள்ள ஒரு சர்ச்சைக்குரிய கருத்து, அதன் கூட்டணிக் கட்சியான சமாஜ்வாதி தலைமையை கோபப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து கமல்நாத் தலைமையில் அங்கு நேற்று அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது.
பெரும்பான்மைக்கு இரு இடங்கள் குறைவாக காங்கிரஸ் பெற்ற நிலையில், அந்த அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்திருந்தனர்.
உத்தர பிரதேசம், பீகார்
இந்த நிலையில்தான் முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ள ஒரு கருத்து அகிலேஷ் யாதவை கோபப்படுத்தியுள்ளது. கமல்நாத் பேசுகையில் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள பல தொழிற்சாலைகள், தொழிலாளர்களை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வருகின்றன. நான் அதை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால், மத்திய பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர். இந்த நிறுவனங்களில் சுமார் 70 சதவீத வேலைவாய்ப்புகள் பிற மாநிலத்தவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. இவ்வாறு முதல்வர் கமல்நாத் தெரிவித்திருந்தார்.
அகிலேஷ் யாதவ் கோபம்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், இது தவறான பேச்சு. மகாராஷ்டிராவில் இது போன்ற பேச்சுக்களை கேட்க முடியும். எதற்காக வட இந்தியர்கள் இங்கே வருகிறார்கள் என்று அங்கே கேட்கிறார்கள். அதே கேள்வியை டெல்லியிலும் கேட்கிறார்கள். இப்போது மத்திய பிரதேசத்தில் இருந்தும் இப்படியான கேள்வி வருகிறது. வட இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால், யார் மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை முடிவு செய்துவிட முடியும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
பீகாரிலும் கோபம்
காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியும் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் எம்பி மற்றும் செய்தி தொடர்பாளர் வீரேந்திரா இதுபற்றி கூறுகையில் இதுபோன்ற விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் எங்கே வேண்டுமானாலும் வசிப்பதற்கும் பணியாற்றுவதற்கும் உரிமை உள்ளது என்று தெரிவித்தார்.
பாஜக வலியுறுத்தல்
இதனிடையே மத்திய அமைச்சர் கிரிராஜ் கிஷோர், இந்த விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மக்களிடம் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அந்த மாநிலங்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார்கள். அவர்கள் இதற்கு தக்க பதில் தருவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.