பஞ்சாப் மேலிட பொறுப்பாளராக கமல்நாத்தை நியமித்து சொந்த காசில் சூனியம் வைத்த காங்.
சண்டிகர்: பஞ்சாப் மாநில மேலிட பொறுப்பாளராக கமல்நாத்தை காங்கிரஸ் கட்சி நியமித்திருப்பது ஆளும் அகாலிதளம், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் மகிழ்ச்சியோடு 'கொண்டாடி' வருகின்றன. ஆளும் சிரோமணி அகாலி தளம்- பாஜக அரசுக்கு எதிரான அதிருப்தி அலை திசை திரும்பி தற்போது 32 ஆண்டுகளுக்கு முந்தைய சீக்கியர்கள் மீதான காங்கிரஸின் வன்முறை சம்பவங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அகாலி தள்- பாஜக கூட்டணி அரசில் ஊழல் மலிந்துவிட்டது; போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலை தூக்கியிருக்கிறது; ஆகையால் ஆளும் அரசுக்கு எதிராக அதிருப்தி அலை வெடித்து கொண்டிருக்கிறது என்பதுதான் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருந்தது. இதனை எதிர்கொள்ள முடியாமல் அகாலி தளமும் பாஜகவும் தத்தளித்து வந்தன.
தூசு தட்டிய மத்திய அரசு
இந்த நிலையில் காங்கிரஸுக்கு எதிரான ஆயுதமாக 32 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. சீக்கியர்கள் படுகொலை வழக்கில் பல காங்கிரஸ் தலைவர்கள் பெயர்களும் அடிபட்டு வந்தன.
கமல்நாத் நியமனம்
இதனிடையே திடீரென உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டு குலாம்நபி ஆசாத்தும் கமல்நாத்தும் புதிய பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கு கமல்நாத் மேலிட பொறுப்பாளராக காங்கிரஸ் நியமிக்கப்பட்டதும் அகாலி தளமும் பாஜகவும் நிம்மதி பெருமூச்சு விட்டன.
சீக்கியர்கள் வன்முறை வழக்கில் கமல்நாத்
ஏனெனில் சீக்கியர்கள் படுகொலை வழக்கில் தொடர்புடையவர் என தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறவர்தான் கமல்நாத். டெல்லியில் சீக்கியர்கள் படுகொலை தொடர்பான நானாவதி கமிஷனில், கமல்நாத் கையில் ஆயுதங்களுடன் நின்றிருந்ததை தாம் பார்த்ததாக ஒருவர் சாட்சியமும் அளித்திருக்கிறார். இதனால் தற்போது போதைப் பொருள் கடத்தல், ஊழல், அரசுக்கு எதிரான அதிருப்தி என பிரதான விஷயங்கள் போய் கமல்நாத் நியமனம் தொடர்பான விமர்சனங்களே பஞ்சாப் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
வரலாற்று தவறு அல்ல
கமல்நாத் நியமனத்துக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர்சிங் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது கமல்நாத் நியமனத்தை நியாயப்படுத்தும் வகையில் விளக்கம் அளித்து வருகிறார் அமரீந்தர்சிங்.
சண்டிகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமரீந்தர்சிங், கமல்நாத்தை மேலிட பொறுப்பாளராக நியமித்திருப்பது வரலாற்றுப் பிழையல்ல; சீக்கியர்களை இந்த நியமனம் காயப்படுத்தவில்லை; பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதலே பலமுறை கமல்நாத்துக்கும் சீக்கியர்கள் படுகொலைக்கும் தொடர்பில்லை எனக் கூறி இருக்கிறார்; கமல்நாத்தை தொடர்ச்சியாக சந்தித்து வந்தவர்தான் முதல்வர் பாதல் என்றார். அதேபோல் ஆம் ஆத்மி தலைவர்களும் இதுவரை கமல்நாத்துடன் நல்ல உறவைத்தான் கடைபிடித்தனர். தற்போது திடீரென அவரை சீக்கியர்கள் மீதான வன்முறைகளில் தொடர்புடையவர் என சித்தரிக்கின்றனர் என்றார்.
ஆனாலும் அகாலிதளமும் பாஜகவும் கமல்நாத்தை முன்வைத்தே தங்களுக்கு எதிரான அதிருப்தி அலையை திசை திருப்பி அறுவடை செயதில் மும்முரமாகவே இருக்கிறது.
சொந்த காசில் சூனியம் வைத்த காங்கிரஸ்!