ஒரு பக்கம் விஜயகாந்த் மெளனம்... மறுபக்கம் சோனியாவுடன் கனிமொழி சந்திப்பு
டெல்லி: ஒருபக்கம் திமுக தலைவர் கருணாநிதி பகிரங்கமாக அழைப்பு விடுத்தும் கூட தேமுதிக தலைவர் விஜயகாந்த் தரப்பில் எந்தவிதமான சலனமும் இல்லாத நிலையில், மறுபக்கம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்தி்ப்பு, தமிழக ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் திருச்சி சிவாவுக்கு ஆதரவு கோருவதற்காக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
தற்போது திமுகவும், காங்கிரஸும் கூட்டணியில் இல்லை என்பது நினைவிருக்கலாம்.
முன்பு கனிமொழிக்குக் கை கொடுத்த காங்.
இதேபோலத்தான் கடந்த ஆண்டு நடந்த ராஜ்யசபாத் தேர்தலின்போதும் திமுகவால் தனித்து தனது வேட்பாளரை வெல்ல வைக்க முடியாத நிலை இருந்தது. அப்போது கனிமொழி போட்டியிட்டார். காங்கிரஸின் ஆதரவை திமுக கோரியது. திமுகவும் ஆதரவு அளித்தது. அப்போதும் காங்கிரஸ், திமுக இடையே கூட்டணி இல்லை.
இப்போதும் கை கொடுக்குமா...
இப்போதும் இரு கட்சிகளிடையே கூட்டணி இல்லை. காங்கிரஸ் வேண்டாம் என்று பகிரங்கமாகவே அறிவித்து விட்டது திமுக. தேமுதிகவை பெரிதும் நம்பியும் உள்ளது. இந்த நிலையில்தான் கனிமொழி, சோனியா சந்திப்பு நடந்துள்ளது. சிவா வெல்ல காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவு கண்டிப்பாக திமுகவுக்குத் தேவை என்பதால் ஆதரவு கோரியே இந்த சந்திப்பு நடந்திருப்பதாக நம்பப்படுகிறது.
நட்புக்காக
திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி இல்லை என்ற போதிலும் நட்பின் அடிப்படையில் காங்கிரஸின் ஆதரவை திமுக கோருவதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், இந்த ஆதரவை வைத்து வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
கருணாநிதிக்காக கனியைச் சந்தித்த சோனியா
திமுக தலைவர் கருணாநிதி நிறைய மரியாதை வைத்துள்ளவர் சோனியா காந்தி என்பது அனைவருக்கும் தெரியும். எனவேதான் கனிமொழி தன்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டபோது, உடனடியாக தனது வீட்டுக்கே வரவழைத்து அவரை சந்தித்துள்ளார் சோனியா.
இந்த நட்பு விஸ்தரித்து, லோக்சபா தேர்தல் கூட்டணியாக உருவெடுக்கமா.. அல்லது சிவாவோடு நின்று விடுமா.. பொறுத்திருந்து பார்க்கலாம்.