அம்பேத்கர் பற்றி அவதூறு பேச்சு.. கன்னட நடிகர் நள்ளிரவில் அதிரடி கைது
பெங்களூர்: அம்பேத்கர் பற்றி அவமரியாதையாக பேசிய கன்னட நடிகர், பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலர்-கன்னடா என்ற தனியார் தொலைக்காட்சி சேனல், பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறது. இதில் கன்னட நடிகர் 'ஹுச்சா' வெங்கட் என்பவரும் பங்கேற்றிருந்தார். ஆனால் ஷோவுக்கு நடுவே, சக போட்டியாளரோடு கைகலப்பில் ஈடுபட்டதாக கூறி, வெளியேற்றப்பட்டார்.
நிகழ்ச்சியில் நடந்தவை குறித்து, பல்வேறு கன்னட செய்தி தொலைக்காட்சி அரங்கங்களுக்கும் சென்று, பேட்டியளித்து வந்தார் வெங்கட். இதேபோல, இரு நாட்கள் முன்பு, ஒரு செய்தி சேனலில் பேட்டியளித்தபோது, சட்ட மேதை அம்பேத்கர் பற்றி அவமரியாதையாக பேசியுள்ளார்.
இதை பார்த்த, தலித் சங்கர்ஷ சமித்தி என்ற தலித் அமைப்பினர் மாநிலம் தழுவிய போராட்டத்தில் குதித்தனர். பெங்களூரின், ஞானபாரதி பகுதியிலுள்ள பெங்களூர் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். ஞானபாரதி காவல் நிலையத்தில், வெங்கட்டுக்கு எதிராக புகார் கொடுத்தனர்.
சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் வெங்கட் செய்ல்பட்டதாக கூறி, செக்ஷன் 504-ன் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று நள்ளிரவில், இந்திரா நகரிலுள்ள, வெங்கட் வீடுபுகுந்து, அவரை கைது செய்துள்ளனர்.
வெங்கட் நடிகர் மட்டுமின்றி, தயாரிப்பாளருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.