பார்ட்டிக்கு சென்ற இடத்தில் கன்னட நடிகை ஸ்ருதி மர்ம மரணம்: நண்பர் கைது
பெங்களூர்: கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ஸ்ருதி மர்மமான முறையில் இறந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ருதி(24). கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். அவர் நடித்த அவனு மத்தே ஷ்ராவணி தொடர் சுவர்ணா டிவியில் ஒளிபரப்பாகி வந்தது.
ஸ்ருதிக்கும் உமேஷ் என்பவருக்கும் திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. திங்கட்கிழமை இரவு ஸ்ருதி தனது நண்பர் ஸ்ரீகாந்த் வீட்டில் நடந்த பார்ட்டிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கும், ஸ்ரீகாந்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ருதி ஸ்ரீகாந்தின் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது திங்கட்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்ருதி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரின் புறநநகர் பகுதியான நீலமங்களா போலீசார் ஸ்ரீகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ருதியின் மரண செய்தி அறிந்து தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.