உ.பி.யில் தடம்புரண்ட ரயில் பெட்டியில் இருந்து 2 சிறுவர்கள் உயிருடன் மீட்பு
கான்பூர்: இன்று காலை விபத்துக்குள்ளான இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் தடம் புரண்ட பெட்டியில் இருந்து 2 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் தேஹத் மாவட்டத்தில் உள்ள புக்ரயன் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் இன்று காலை தடம்புரண்டன. இந்த விபத்தில் 100 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் தடம்புரண்ட பெட்டிகளில் ஒன்றான எஸ்3-ல் இருந்து 6 மற்றும் 7 வயது சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்களின் அருகில் பெண் ஒருவரின் சடலம் இருந்தது. அந்த பெண் அவர்களின் தாயாக இருக்கலாம் என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். மற்றொரு பெட்டியில் இரண்டு சிறுமிகள் சிக்கியுள்ளனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் மக்கள் அதிக அளவில் கூடியிருப்பதால் மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.