கார்கில் 15: எருதைத் தேடிப் போய் எதிரிகளைக் கண்ட டாஷி... பாக். ஊடுருவலை முதலில் கண்டவர்
டிராஸ், ஜம்மு காஷ்மீர்: கார்கில் போருக்கு முன்னதாக, பாகிஸ்தானிய படையினர் நமது எல்லைக்குள் ஊடுறுவி வந்ததை முதன் முதலில் கண்டு, ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை இந்திய ராணுவத்திற்கு எடுத்துச் சொல்லி உஷார் படுத்தியவர் தான் டாஷி நம்பியாள் என்ற காஷ்மீர் மனிதர்.
காஷ்மீரின் கர்கான் பகுதியைச் சேர்ந்த டாஷி, தனது காணாமல் போன எருதைத் தேடிச் சென்றபோது படாலிக் பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் இருப்பதைக் கவனித்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக இந்திய ராணுவத்திடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கார்கில் போர் முடிந்து 15 வருடங்களாகியுள்ள நிலையில், இன்றும் கண்களில் அச்சம் விலகாத நிலையில் அன்று நடந்ததை நினைவு கூறுகிறார் டாஷி. இது தொடர்பாக ஒன் இந்தியா செய்தியாளர் ரிச்சா பாஜ்பாய்க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது :-

மர்ம நபர்கள் நடமாட்டம்...
சம்பவத்தன்று நான் காணாமல் போன எனது எருதைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு மலையின் உச்சியில் நின்று எனது எருது எங்காவது தென்படுகிறதா என நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, திபெத்திய எல்லைக்கு அருகே படாலிக் மலைப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் நடமாடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

பாகிஸ்தான் நபர்கள்...
முதலில் அவர்கள் இந்திய ராணுவ வீரர்களாக இருக்கலாம் எனக் கருதிய நான், அவர்களது நடவடிக்கைகளால் சந்தேகமடைந்தேன். மேலும், அவர்கள் கல் போன்ற ஒன்றை உடைத்து அதன் உள்ளே பனியை திணிப்பதை நான் கண்டேன். அப்போது தான் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானது' எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவ முகாம்...
எதிரிகளின் நடமாட்டம் இருக்கிறது எனத் தெரிந்ததும், உடனடியாக சுராஹ் பகுதியிலுள்ள இந்திய ராணுவ வீரர்கள் தங்கி இருந்த முகாமிற்கு சென்றுள்ளார் டாஷி. அங்கிருந்த அதிகாரிகளிடம் தான் கண்டவற்றை அப்படியே விவரித்துள்ளார்.

உறுதி...
டாஷியிடம் அடுத்தடுத்து கேட்கப்பட்ட சில கேள்விகள் மூலம் எதிரிகள் நடமாட்டம் இருப்பதை இந்திய ராணுவ வீரர்கள் உறுதி செய்துள்ளனர்.

கேள்வி...
உடனடியாக அப்பகுதியில் ரோந்து சுற்றிய 25 வீரர்களிடம் இது தொடர்பாக ராணுவ உயரதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அவர்கள் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரையும் பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

டாஷி உதவியோடு...
ஆனபோதும், அடுத்த நாள் டாஷியின் உதவியோடு பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் இருந்த இடத்தைக் கண்டு பிடித்தனர் இந்திய ராணுவத்தினர்.

தகவல்...
தொலைதொடர்பு வசதி மோசமாக இருந்த அந்தக் காலத்தில் சிரமப்பட்டு பாகிஸ்தானின் இந்த ஊடுறுவல் குறித்து உயரதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் அளித்தனர்.

கார்கில் போர்...
இந்தச் சம்பவம் நடந்ததிலிருந்து சரியாக எட்டாவது நாள் கார்கில் போர் வெடித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications