ராஜினாமாவா? கர்நாடகா, அஸ்ஸாம் மாநில ஆளுநர்கள் மறுப்பு!!
டெல்லி: கர்நாடகா மற்றும் அஸ்ஸாம் மாநில ஆளுநர்கள் தாங்கள் ராஜினாமா செய்யவில்லை என்று மறுத்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் அஸ்ஸாம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில ஆளுநர்களை ராஜினாமா செய்யுமாறு மத்திய உள்துறை செயலர் கோஸ்வாமி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதை கேரள முதல்வர் ஷீலா தீட்சித் ஏற்கவில்லை.
ஆனால் உத்தரப்பிரதேச ஆளுநர் பி.எல். ஜோஷி நேற்று ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து கர்நாடகா ஆளுநர் பரத்வாஜ் மற்றும் அஸ்ஸாம் ஆளுநர் ஜே.பி. பட்நாயக் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் இருவருமே தாங்கள் ராஜினாமா செய்யவில்லை என்று மறுத்துள்ளனர். தாங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை நேரில் சந்தித்துப் பேசிய பின்னர்தான் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியும் என்று இருவரும் கூறியுள்ளனர்.
ஜோஷி ராஜினாமா ஏற்பு
இதனிடையே ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், உத்தரப்பிரதேச ஆளுநராக இருந்த பி.எல். ஜோஷியின் ராஜினாமா ஏற்கப்படுகிறது. புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரையில் உத்தர்காண்ட் ஆளுநர் அஜிஸ் குரோஷி கூடுதல் பொறுப்பாக உத்தரப்பிரதேச ஆளுநராக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.