பெரிய அசம்பாவிதங்கள் இன்றி முடிந்தது கர்நாடக பந்த்.. பெங்களூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
Recommended Video

பெங்களூர்: கர்நாடக பந்த் காரணமாக, பெங்களூரிலுள்ள விப்ரோ உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்திருந்தன. 12 மணி நேரம் நடைபற்ற பந்த் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் இன்றி நிறைவடைந்தது.
கோவா மாநிலத்துடனான, மகதாயி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெற்றது.
வாட்டாள் நாகராஜ் ஏற்பாட்டின்பேரில் நடைபெற்ற இந்த பந்த்திற்கு, 2000த்துக்கும் அதிகமான கன்னட அமைப்புகள் ஆதரவு அளித்து களத்தில் குதித்திருந்தன.

பள்ளி, கல்லூரிகள்
பெங்களூரில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நகரில் பெருமளவில் அரசு பஸ்கள் இயங்கவில்லை என்பதால், ஆட்டோ, டாக்சியை நம்பியிருந்தனர் மக்கள். கணிசமான அளவுக்கு கட்டணத்தை அதிகரித்து ஆட்டோ, டாக்சிகள் இயங்கின.

ஐடி நிறுவனங்கள்
இந்த நிலையில், இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவித்தன. சில நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றிக்கொள்ள ஊழியர்களுக்கு அனுமதி வழங்கின. சில நிறுவனங்கள் வழக்கம்போல செயல்பட்டதையும் பார்க்க முடிந்தது.

மெட்ரோ ரயில் இயங்குகிறது
பெங்களூரில் மெட்ரோ ரயில்கள் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்பட்டது. சிட்டி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற 120க்கும் மேற்பட்ட கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரில் வன்முறை
பெங்களூரின் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள உடுப்பி கார்டன் என்ற ஹோட்டல் மற்றும் ஒரு பேக்கரி மீது வாட்டாள் நாகராஜ் ஆதரவாளர்கள் கல்வீசி தாக்கியதில் அவை சேதமடைந்தன. கல்வீசியவர்களை போலீசார் கைது செய்தனர். மற்றபடி பெரிய அளவில் மாநிலத்தின் எந்த பகுதியிலும் அசம்பாவித சம்பங்கள் நடைபெறவில்லை. மாலை 6 மணிக்கு மேல் தமிழக பஸ்கள் கர்நாடகாவிற்குள் இயங்கத் தொடங்கின. முன்னதாக தனியார் பஸ்கள் மற்றும் கர்நாடக அரசு பஸ்கள், பெங்களூரிலிருந்து பிற ஊர்களுக்கு கிளம்பி சென்றன. பிற ஊர்களில் இருந்தும் பெங்களூர் வந்தன. பிப்ரவரி 4ம் தேதி பெங்களூரில் மற்றொரு பந்த்துக்கு கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications