கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 'ரோபோ' உதவியுடன் மீட்பதில் சிக்கல்
பாகல்கோட்டை: கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணி மந்தகதியில் நடந்து வருகிறது. மதுரை மணிகண்டன் குழுவினரின் ரோபோவால் சிறுவனை மீட்க முடியவில்லை. இதனால் சிறுவனை உயிரோடு மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாகல் கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா சூலிகேரி கிராமத்தை சேர்ந்தவர் ஹனுமந்தகட்டி. இவரது மகன் திம்மண்ணா (6). கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஹனுமந்தகட்டிக்கு சொந்தமான கரும்பு தோட்டத்திற்கு உறவுக்கார சிறுவனை அழைத்துச் சென்றான் திம்மண்ணா.

அங்கு சுமார் 300 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டு சாக்குப்பையால் மூடப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றின் வாய்பகுதியை திறந்து பார்த்துள்ளான் திம்மண்ணா. அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று வரை சிறுவனை மீட்க தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக போர்வெல் அருகே பெரிய பள்ளம் பொக்லைன் உதவியால் தோண்டப்பட்டுவருகிறது. இதுவரை சுமார் 120 அடி ஆழத்துக்கு பொக்லைன் தோண்டியுள்ளது. 4வது நாளாக மீட்பு பணி நடைபெற்றுவரும் நிலையில், சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக பள்ளத்தில் இறங்கி தற்போது சுமார் 200 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மதுரையை சேர்ந்த ரோபோ விஞ்ஞானியான ஆசிரியர் மணிகண்டன் மீட்பு பணிக்கு அழைக்கப்பட்டார். நேற்று இரவு சுமார் 10 மணிக்கு அவர் சம்பவ இடத்துக்கு சென்று சேர்ந்தார். அவருடன் ஒரு குழுவையும் அழைத்து சென்றுள்ளார். அந்த குழு நேற்று இரவு விடியவிடிய மீட்பு பணியில் ஈடுபட்டும் பலன் கிடைக்கவில்லை.
சிறுவனுக்கு மேலே மணல் விழுந்து அடைத்துக் கொண்டிருப்பதால், ரோபோவின் கரங்கள் சிறுவனை கவ்வி பிடிக்க முடியவில்லை. எனவே மணல் உறிஞ்சும் இயந்திரத்தை கொண்டு சுமார் 2 அடிக்கும் அதிக ஆழ மணல் அள்ளப்பட்டது. மணலும், கல்லும் குறுக்கே இருப்பதால் சிறுவனை காப்பாற்றுவதில் சிக்கல் நிலவுவதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications