முதல்வர் சித்தராமையா விருப்பத்திற்கு எதிராக சோனியா கட்டளை.. இன்று 4 அமைச்சர்கள் பதவியேற்பு
பெங்களூர்: சித்தராமையாவின் அதிருப்தியையும் மீறி காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கட்டளையால் கர்நாடக அமைச்சரவை இன்று, விரிவாக்கம் செய்யப்படுகிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் உட்பட 4 பேர் புதிதாக அமைச்சர்களாகிறார்கள்.
காங்கிரஸ் ஆளும் சித்தராமையா தலைமையிலான, கர்நாடக அமைச்சரவையில் 30 அமைச்சர்கள் உள்ளனர். எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் மேலும் 4 அமைச்சர்களை இணைக்க வழியிருந்தும் சித்தராமையா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அமைச்சரவையை விஸ்தரித்தால், பதவி கிடைக்காதவர்கள் ஆட்சிக்கு எதிராக, கலகம் செய்வார்கள் என்பது சித்தராமையா பயமாக இருந்தது.
எஸ்.எம்.கிருஷ்ணா அதிருப்தி
அதிருப்தியடைந்த மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் மற்றும் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையலிலான காங்கிரஸ் கோஷ்டியினர் தேசிய தலைவர் சோனியாகாந்தியிடம் தொடர்ந்து லாபியில் ஈடுபட்டனர்.
சோனியா உத்தரவு
இதையடுத்து, 2 நாட்கள் முன்பு, டெல்லிக்கு சித்தராமையாவை அழைத்தார் சோனியா. அமைச்சரவையை விஸ்தரிக்க உத்தரவிட்டார். அமைச்சரவை விரிவாக்கம் செய்தால், அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் அதிருப்தியடைவார்கள் என்று சித்தராமையா வாதிட்டுள்ளார்.
சோனியா உறுதி
அமைச்சரவையை விரிவாக்கம் செய்யாமல் வைத்துக்கொண்டால், நமக்கு எப்படியும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் பேசாமல் இருப்பார்கள். 4 ஆண்டு ஆட்சி காலம் முடிந்த பிறகு, அமைச்சரவையை விஸ்தரிக்கலாம் என்று சித்தராமையா கூறியதாக தெரிகிறது. ஆனால் எதிர்தரப்பில் அழுத்தம் அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய சோனியா, அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய அறிவுறுத்தினார்.
4 அமைச்சர்கள்
இதையடுத்து மேலும் 4 அமைச்சர்களை சேர்த்துக்கொள்ள சித்தராமையா முடிவு செய்துள்ளார். மேலவை உறுப்பினராகவும் பதவி வகிக்கும் பரமேஷ்வர், எம்.எல்.ஏக்கள் அரக்கல்கூடு மஞ்சு, வினய் குல்கர்னி, மேலவை உறுப்பினர் மனோகர் தாசில்தார் ஆகியோரை அமைச்சரவையில் இணைக்க சித்தராமையா ஓ.கே. கூறியுள்ளார்.
இன்று பதவியேற்பு
இதில் பரமேஷ்வர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். மஞ்சு, வொக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவர். பிறர் அந்தந்த பகுதியில் மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள். இன்று மாலை ராஜ்பவனில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடக்கிறது.