'துணை முதல்வர்'... மடியில் கட்டிய பூனை மாதிரி.. ஒரே கோவிலில் டிகே சிவகுமாரிடம் சித்தராமையா பட்டபாடு!
பெலகாவி: கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா தமது குடும்பத்தினர் விரைவில் முடா முறைகேடு வழக்கில் இருந்து விடுதலையாக பெலகாவி எல்லம்மா கோவிலில் மனைவி பெயரில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். அதே கோவிலில் சித்தராமையாவுடன் சென்ற துணை முதல்வர் டிகே சிவகுமார், சித்தராமையா பதவி விலகி தாம் விரைவில் முதல்வராக வேண்டும் என தனியே தியானம் செய்திருக்கும் சுவாரசியமான நிகழ்வு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகா முதல்வராக சித்தராமையா பதவியில் இருந்தாலும் அவரது தலைக்கு மேலே தொங்கும் கத்தியாக முடா நில முறைகேடு வழக்கு மட்டும் அல்ல... துணை முதல்வர் டிகே சிவகுமாரின் வியூகங்களும் இருக்கின்றன என்பது நாடறிந்த ஒன்று. சித்தராமையா எனும் அண்ணன் எப்ப கிளம்புவார் திண்ணை எப்ப காலியாகும் என்ற கதையாக அவரது முதல்வர் பதவி எப்போது பறிபோகும்; தமக்கு எப்ப முதல்வர் பதவி கிடைக்கும் என இலவு காத்த கிளியாக இருக்கிறார் துணை முதல்வர் டிகே சிவகுமார்.

சித்தராமையா மனைவி பார்வதிக்கு முடா எனும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்ததன் பின்னணியில் இருப்பதே துணை முதல்வர் டிகே சிவகுமார்தான் என மத்திய அமைச்சர் குமாரசாமி ஏற்கனவே பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார். டிகே சிவகுமாரும் தம்மால் முடிந்த அளவுக்கு சித்தராமையாவுக்கு குழிபறித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பது கர்நாடகா அறிந்த ஒன்றுதான். இதற்கு பதிலடியாகவே, சித்தராமையா ஆதரவு அமைச்சர்கள் எங்களுக்கும் துணை முதல்வர் பதவி கொடுங்க என டெல்லி மேலிடத்தை நெருக்கினர்.
ஆனால் ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மரண அடி வாங்கியதைத் தொடர்ந்து கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களுக்கு டெல்லி மேலிடம் வாய்ப்பூட்டு பூட்டதால் அனைத்து தரப்பும் கப்சிப் என அடங்கிக் கிடக்கின்றனர். அத்துடன் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்காக சித்தராமையாவை டிகே சிவகுமார் நேரில் சென்று சந்தித்தார். மேலும் பெலகாவிக்கு சித்தராமையாவும் டிகே சிவகுமாரும் ஒன்றாகவே சென்றனர்.
பெலகாவி எல்லம்மா தேவி கோவிலில் முடா வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டு மனைவி பார்வதி பெயரில் சித்தராமையா சிறப்பு பூஜைகள் செய்தார். இந்த சிறப்பு பூஜைக்கு பின்னர் சித்தராமையா கோவிலுக்கு வெளியே வந்துவிட்டார். ஆனால் அவருடன் சென்ற துணை முதல்வர் டிகே சிவகுமார் தன்னந்தனியே 10 நிமிடத்துக்கும் மேலாக தியானம் செய்து கொண்டிருந்தார். டிகே சிவகுமார் வரும் வரை சித்தராமையாவும் காத்திருந்தார். பின்னர் இருவரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், முதல்வர் பதவியைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக சித்தராமையா சிறப்பு பூஜைகள் செய்கிறார். அதே கோவிலில் அவருடனே சென்ற துணை முதல்வர் டிகே சிவகுமார் வேறு எதற்காக தனியாக தியானம் செய்திருக்கப் போகிறார்? சித்தராமையாவின் முதல்வர் பதவி விரைவில் காலியாக வேண்டும்; தமக்கு அந்த பதவி கிடைக்க வேண்டும் என்பதற்குதான் என்கின்றனர் நமட்டுச் சிரிப்புடன்.












Click it and Unblock the Notifications