நாட்டிலேயே முதல்முறை: கர்நாடகாவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சித்தராமையா உத்தரவு
பெங்களூரு: நாடு சுதந்திரமடைந்ததற்கு பிறகு முதன்முறையாக, கர்நாடகாவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கலெக்டர்களுக்கு இதற்கான உத்தரவை முதல்வர் சித்தராமையா பிறப்பித்துள்ளார்.
1931ம் ஆண்டு இந்தியாவில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தது முதல், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் சித்தராமையா ஆர்வம் காட்டிவருகிறார்.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் சரியாக போய் சேருகிறதா என்பதை அறிந்துகொள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்பது சித்தராமையா கருத்தாக உள்ளது. இதனிடையே பெங்களூருவில் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்திய சித்தராமையா, கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஆயத்தம் செய்யுமாறு உத்தரவிட்டார்.
கர்நாடகாவில் 1 கோடியே 25 லட்சம் வீடுகள் உள்ளன. வீடு வீடாக சென்று ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியில் அரசு ஊழியர்களை ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின்போது மக்களின் வாழ்க்கைத்தரம், வேலைவாய்ப்பு நிலை போன்றவற்றையும் கணக்கெடுக்க உள்ளனர்.
இம்மாதம் 11ம்தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆயத்தப்பணிகள் துவங்க வேண்டும், ஏப்ரல் மாதம் முதல், வீடு வீடாக சென்று கணக்கெடுப்பை தொடங்க வேண்டும் என்பது சித்தராமையா உத்தரவாகும். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட முயன்றபோது அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம், இத்திட்டத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றபோதும், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது சட்டத்திற்கு புறம்பானது என்று உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications