கர்நாடகா தேர்தல்: காங். தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும்.. தொங்கு சட்டசபை அமையும் - ஏபிபி சர்வே
கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிபெரும் கட்சியாக உருவெடுத்தாலும் தொங்கு சட்டசபையே அமையும் என கருத்து கணிப்பில் தகவல்.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிபெரும் கட்சியாக உருவெடுத்தாலும் தொங்கு சட்டசபையே அமைக்க வாய்ப்புகள் அதிகம் என்று ஏபிபி செய்தி நிறுவனம் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.
கர்நாடகத்தில் வரும் மே 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மொத்தம் 225 தொகுதிகளில் எத்தனை இடங்களில் மேற்கண்ட 3 கட்சிகள் வெற்றி பெறும் என்பது குறித்த சர்வேயை ஏபிபி செய்தி நிறுவனம் எடுத்துள்ளது.

தொங்கு சட்டசபை
கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகையில், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 97 இடங்களும், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடியூரப்பா தலைமையிலான பாஜகவுக்கு 84 இடங்களும் கிடைக்கும். முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்று கிங் மேக்கராக உருவெடுக்கும். தனிபெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தாலும் தொங்கு சட்டசபையே அமையும்.

சித்தராமையா ஆட்சியே வேண்டும்
காங்கிரஸ் கட்சிக்கு 38 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 33 சதவீத வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள ஜேடிஎஸ் கட்சிக்கு 22 சதவீத வாக்குகளும் கிடைக்கும். கருத்து கணிப்பு எடுக்கப்பட்டவர்களில் ராகுல் காந்தியை மாநில விவசாயிகளுக்கு பிடித்திருப்பதால் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸுக்கு வாக்களிப்பதாக 40 சதவீத பேர் கூறியுள்ளனர். அதேவேளையில் 31 சதவீதம் பேர் பாஜகவுக்கு வாக்களிப்பதாக கூறுகின்றனர்.

என்ன காரணம்
சித்தராமையாவே முதல்வராக வர வேண்டும் என்பதே 33 சதவீத வாக்காளர்கள் கூறியுள்ளனர். பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கு 27 சதவீதம் பேரும் , ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமிக்கு 22 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளே முக்கிய பிரச்சினையாக 29 சதவீதம் பேர் கூறுகின்றனர்.

சுமாரான செயல்பாடு
லிங்காயத்துகளுக்கு தனி மத அடையாளம் அளித்து அவர்களை சிறுபான்மையின பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்த போதிலும் அந்த சமூகத்தினரில் 61 சதவீதம் பேர் பாஜகவுக்கு வாக்களிக்கவே விரும்புகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் 29 சதவீம் பேர் முழு திருப்தி உள்ளதாகவும் அதன் செயல்பாடுகள் சுமார்தான் என்று 43 சதவீதம் பேரும் கூறியுள்ளதாக அந்த கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications