கர்நாடக தேர்தல்: இலவச தோசை, இண்டர்நெட், காஃபி.. வாக்காளர்களை கவர சூப்பர் ஐடியா!
கர்நாடகாவில் நடக்கும் தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இலவசமாக தோசை, காஃபி, இண்டர்நெட் எல்லாம் வழங்கப்பட்டு வருகிறது.
பெங்களூர்: கர்நாடகாவில் நடக்கும் தேர்தலில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இலவசமாக தோசை, காஃபி, இண்டர்நெட் எல்லாம் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் அமைப்புகள் இதை செய்து வருகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை ஒரே வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதால், ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது 3 மணி வரை 56 சதவிகித ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது. தேர்தல் ஆணையம் நினைத்ததை விட இது கொஞ்சம் குறைவான வாக்குப்பதிவுதான். இதனால் வாக்கு அளிக்கும் நபர்களின் எண்ணிக்கையை தனியார் நிறுவனங்கள் வித்தியாசமாக அதிகரித்து வருகிறது.
அதன்படி பெங்களூரில் இருக்கும் பெரும்பாலான ஹோட்டல்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு வந்தால், அவர்களுக்கு இலவசமாக ஒரு தோசை, காஃபி கொடுக்கிறார்கள். பெரும்பாலான கடைகளில் எல்லா வாக்காளர்களுக்கும் காஃபி கொடுக்கிறார்கள். விரலை காண்பித்து தோசை வாங்கி கொள்ளலாம்.
ராஜாஜி நகரில் உள்ள காஃபி கடை ஒன்றில், வாக்களித்துவிட்டு வரும் நபர்களுக்கு இலவசமாக இண்டர்நெட் வழங்கப்படுகிறது. அதேபோல் அதே நகரில் உள்ள முடி திருத்தும் சலூன் ஒன்றில் வாக்களித்துவிட்டு வரும் நபர்களுக்கு டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவின் பெல்காவி தொகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில், பெட்ரோல் விலை ஒரு ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது. வாக்களிப்பதை அதிகரிப்பதற்காக இப்படி செய்து இருக்கிறார்கள். பெங்களூரின் பெரும்பாலான இடங்களில் இப்படி கடைப்பிடித்து வருகிறார்கள்.
முதலில் இதை பெங்களூர் மாநகராட்சி நிர்வாகமே, தனியாரிடம் பேசி தள்ளுபடி கொடுக்க சொல்லலாம் என்று நினைத்து இருக்கிறார்கள். ஆனால் கடைசியில் அரசியல் தலையீடு எதுவும் வந்துவிட கூடாது என்று விட்டுவிட்டனர். இதை தனியார்கள் தானாக விருப்பப்பட்டு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications