கர்நாடகாவில் சிக்கியது எல்லாமே ஒரிஜினல் "ஐடி".. டுபாக்கூர் கிடையாது.. தேர்தல் ஆணையம் ஷாக் பதில்!
கர்நாடகாவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளில் எதுவுமே போலியானது கிடையாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளில் எதுவுமே போலியானது கிடையாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் ஒரே வீட்டில் ஆயிரக்கணக்கில் உண்மையான அடையாள அட்டைகள் இருந்தது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
இதற்காக கட்சிகள் தீவிரமாக கடைசி நாள் பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.எல்லா கட்சியில் இருந்தும் முக்கியமான தலைவர்கள் அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கூடி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக மாநில தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை பிரச்சனை ஒன்று உருவாகி உள்ளது.
நேற்று முதல் நாள் இரவு ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கொத்தாக நிறைய வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 10,000 வாக்காளர் அடையாள அட்டை நேற்று முதல்நாள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே வீட்டிற்குள் ஒரு மூட்டை முழுக்க இப்படி வாக்காளர் அடையாள அட்டை வைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து 24 மணி நேர விசாரணைக்கு மாநில தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.அவர்கள் அந்த அறையை சோதனையிட்ட போது, அதனுள் யாருமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு நாள் விசாரணையின் முடிவில் தற்போது, துணை தேர்தல் ஆணையர் சந்திரபூஷன் குமார் முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி ராஜ ராஜேஸ்வரி தொகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளில் எதுவுமே போலியானது கிடையாது என்று அறிவித்துள்ளார். எல்லா அடையாள அட்டையும் உண்மையானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த அறையில் இருந்து எந்தவிதமான மோசடியும் செய்யப்படவில்லை, தேர்தல் ஆணையத்தின் இணையதளம் ஹேக் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் பாஜக, காங்கிரஸ் இடையே நடந்து வந்த சண்டைக்கு அர்த்தம் இல்லாமல் போய் உள்ளது. இரண்டு கட்சிகளும், இது போலி அடையாள அட்டை என்று கூறி மாறி மாறி குற்றச்சாட்டு வைத்து இருந்தார்கள். ஆனால் இப்போது இந்த அடையாள அட்டைகள் போலி கிடையாது என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும் இதில் இன்னும் சில புதிரான விஷயங்களுக்கு விடை கிடைக்கவில்லை.
ஒரே வீட்டில் ஆயிரக்கணக்கில் உண்மையான அடையாள அட்டைகள் இருந்தது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இத்தனை அடையாள அட்டைகளை ஏன் அந்த வீட்டில் இருந்தவர்கள் பதுக்கி வைத்து இருந்தார்கள் என்று தெரியவில்லை. இதில் இன்று தேர்தல் ஆணையம் முக்கியமான முடிவுகளை எடுக்கும் என்று கூறப்படுகிறது.