முதலில் அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஜெயலலிதா ஜாமீன் மனு!
இதனால் அக்டோபர் 6ம் தேதி வரை ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது அதிமுக வழக்கறிஞர்களின் வற்புறுத்தல் காரணமாக நாளையே இந்த மனுவை மீண்டும் விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் காலையில் சோகமடைந்த அதிமுகவினர் தற்போது உற்சாகமடைந்துள்ளனர்.
தனி நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யவும், தண்டனையை நிறுத்தி வைக்கவும், சொத்துக்களை முடக்குவது தடை செய்யுமாறும், ஜாமீன் வழங்குமாறும் கோரிக்கை விடுத்து மனு செய்துள்ளனர் நால்வரும். இந்த மனுக்கள் அனைத்தும் உயர்நீதிமன்ற விடுமுறை கால நீதிபதி ரத்னகலா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜரானார். விசாரணையையொட்டி கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினர் பெருமளவில் குவிந்து விட்டனர். மேலும் அதிக வக்கீல்களும் கோர்ட்டிற்குத் திரண்டு வந்திருந்தனர். இதனால் உயர்நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது. போலீஸாரும் பெருமளவில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த சூழ்நிலையில் மனுவை விசாரித்த நீதிபதி ரத்னகலா விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால் அதிமுக தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்தது. அக்டோபர் 6ம் தேதிதான் தசரா விடுமுற முடிந்து கர்நாடக உயர்நீதிமன்றம் முழுமையாக செயல்படத் தொடங்கும். இதனால் அக்டோபர் 6ம் தேதி வரை ஜெயலலிதா சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய கோரிக்கையைத் தொடர்ந்து நாளையே இந்த மனுக்கள் விசாரிக்கப்படவுள்ளன. இதனால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கலாமோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.
முன்னதாக ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யபட்டிருந்த மனுவில், தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். ‘இசட்' பிரிவு பாதுகாப்புடன் மிகமிக முக்கிய பிரமுகர் அந்தஸ்தில் இருப்பவர்.
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்தார். எனவே அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். பெங்களூரில் உள்ள சூழ்நிலைகள் அவரது உடல் நிலைக்கு ஒவ்வாது என்பதால், மருத்துவ காரணங்களின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.
ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க மாட்டார். நாட்டை விட்டும் வெளியேற மாட்டார். சென்னையில் வருமானவரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சொத்துகள் சட்டவிரோதமானது அல்ல என்றும், அவர் குற்றம் அற்றவர் என்றும் கூறப்பட்டு உள்ளதாகவும், இதை பெங்களூர் தனிக்கோர்ட் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு குற்றச்சாட்டு தவறானது. சட்டப்படிதான் அவர் சொத்துகள் வாங்கியதாகவும் கூறப்பட்டிருந்தது.