கர்நாடகாவில் பிற மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை வரி இன்றி ஓராண்டு ஓட்டலாம்!
பெங்களூர்: பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் கர்நாடகாவில் ஓராண்டு காலம் வரை ஆயுட்கால சேவை வரி செலுத்தாமல் ஓடலாம் என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் கர்நாடக மாநிலத்தில் ஓடினால் அதற்கு ஆயுட்கால சேவை வரி விதிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு மாற்றம் கொண்டு வந்தது.

அதன்படி பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் கர்நாடகாவில் 30 நாட்களுக்கு மேல் ஓடினால் ஆர்.டி.ஓ.க்கள் வாகனத்தை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர் ஆயுட்கால சாலை வரியை செலுத்திய பிறகே வாகனத்தை திருப்பிக் கொடுக்கின்றனர்.
இந்நிலையில் டிரைவ் வித்அவுட் பார்டர்ஸ் என்ற சமூக வலைதள சமூகம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில் அது கூறியிருப்பதாவது,
இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திற்கும் சுதந்திரமாக சென்று வரும் அடிப்படை உரிமையை பறிப்பது போன்று உள்ளது கர்நாடக அரசு விதித்துள்ள சாலை வரி. அதனால் இந்த வரியை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வெளிமாநிலங்களில் பதிவு செய்த வாகனங்களுக்கான சாலை வரியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சாலை வரி தொடர்பாக மோட்டார் வாகன சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். பிற மாநில வாகனங்கள் கர்நாடகாவில் ஓராண்டு வரை சாலை வரி இன்றி ஓடலாம். அதன் பிறகு வாகன உரிமையாளர்கள் ஆயுட்கால சாலை வரியை செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆயுட்கால சாலை வரி என்பது உங்களின் வாகனத்தின் விலையில் 10 முதல் 25 சதவீதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications