குண்டு வெடிப்பில் காயமடைந்த கார்த்திக் உடலில் இருந்து ஒரு இன்ச் நீள இரும்பு போல்ட் அகற்றம்!
பெங்களூரு: நேற்றிரவு பெங்களூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த இளைஞர் கார்த்திக்கிற்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. இன்னும் சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனிடையே கார்த்திக்கை கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பெங்களூரு எம்ஜிரோடு, சர்ச் ரோடு பகுதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பவானி என்ற பெண் உயிரிழந்தார். அவரது உறவினர் கார்த்திக் படுகாயமடைந்து மல்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த மருத்துவமனைக்கு இன்று காலையில் உள்துறை அமைச்சர் ஜார்ஜ் சென்று கார்த்திக்கிடம் உடல் நலம் விசாரித்தார். பெங்களூரு பொறுப்பு அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி ஆகியோரும் ஆஸ்பத்திரி சென்று உடல் நலம் விசாரித்தனர்.
இதனிடையே கார்த்திக்கிற்கு இன்று ஆபரேசன் நடைபெற்றது. பாஸ்கர் பை என்ற மூத்த டாக்டர் தலைமையிலான மருத்துவர் குழு இந்த ஆபரேசனை மேற்கொண்டது. கார்த்திக்கின் முதுகில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், வெடிகுண்டு வெடித்ததும் குண்டின் உள்ளேயிருந்த துகள்கள் கார்த்திக்கின் உடலுக்குள் புகுந்துள்ளது. அவற்றை எடுக்காவிட்டால் உடலில் விஷம் பரவிவிடும் என்பதால் இந்த ஆபரேசன் நடைபெற்றது.
அரை மணி நேரம் நடந்த ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். கார்த்திக்கின் உடலுக்குள் இருந்து ஒரு இன்ச் அளவுள்ள இரும்பு 'போல்டு' வெளியே எடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டுவின் உள்ளே வைக்கப்பட்டிருந்த போல்டு, கார்த்திக்கின் உடலுக்குள் புகுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெடிகுண்டால் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்க வேண்டும், என்பதற்காக இரும்பிலான போல்டு, நட்டு, ஆணி, கண்ணாடி துண்டுகள் போன்றவற்றை குண்டுக்குள் வைத்து வெடிக்கச் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நோக்கத்திற்காக, அந்த இரும்பு துண்டு போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நிருபர்களிடம் டாக்டர் பாஸ்கர் பை அளித்த பேட்டியில், "கார்த்திக் மன உளைச்சலில் உள்ளார். உறவுக்கார பெண் மரணமடைந்த செய்தி அவரை மேலும் உலுக்கியுள்ளது. எனவே இன்று முழுவதும் அவருக்கு ஐசியூ பிரிவிலேயே சிகிச்சை அளிக்கப்படும். இன்னும் இரு தினங்களில் கார்த்திக் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்" என்றார்.












Click it and Unblock the Notifications