உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி... காவிரியில் 15,000 கன அடி நீரை திறந்துவிட்டது கர்நாடகா!
பெங்களூரு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய 15 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தரவேண்டிய 50.052 டிஎம்சி நீரை கர்நாடக அரசு வழங்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தது. தமிழக அரசின் மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாஃப்டே ஆஜராகி வாதாடினார். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை கர்நாடக அரசு முறையாக வழங்குவதில்லை. கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. இந்தப் போக்கு, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மீறும் செயலாகும்.
இது குறித்து மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆனால், எந்தப் பதிலும் வரவில்லை. ஆகவேதான் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடியுள்ளது. எனவே, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை நீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சேகர் நாஃப்டே வாதிட்டார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள், "வாழுங்கள்! வாழ விடுங்கள்!!' என்ற கொள்கை அடிப்படையில் இரு மாநிலங்களும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும். நதி நீர்ப் பங்கீடு பிரச்சனையால் பாதிக்கப்படுவது பொதுமக்களும் விவசாயிகளும்தான். எனவே, மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.