காவிரி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மறுசீராய்வு மனு?
பெங்களூர்: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனுவை, கடந்த 20ம் தேதி,விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு 21 முதல் 27ம் தேதி வரை 6 ஆயிரம் கன அடி காவிரி நீரை கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் 30ம் தேதி (இன்று) வரை தமிழகத்துக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு கடந்த 27ம் தேதி உத்தரவிட்டது. இதை கர்நாடகா ஏற்கவில்லை. சட்டசபையை கூட்டி, தண்ணீர் விடமாட்டோம் என தீர்மானத்தை நிறைவேற்றியது.

இதைத்தொடர்ந்து டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் இரு மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்ட சமரச கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடகா திட்டவட்டமாக கூறிவிட்டதால் தீர்வு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இந்த அறிக்கையை மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தது. மத்திய அரசின் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், அக்டோபர் 4-க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. வாரியத்தில் இடம்பெறும் நிபுணர்களின் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என்றும் இன்று மாலை 4 மணிக்குள் 4 மாநில அரசுகள் நிபுணர்கள் பெயரை தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. மேலும் இன்று முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை தமிழகத்துக்கு 6000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு புதிய உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்தது.
இந்நிலையில் இதனை எதிர்த்து கர்நாடக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு நகல் இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் இதுதொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். மேலும் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமனிடம் இதுகுறித்து விவாதித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications